அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை.. இக்பால் காயத்ரிக்கு ஸ்பெஷல் அழைப்பு.. யார் இவங்க?
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதில் இக்பால் அன்சாரி, காயத்ரி தேவி இருவரும் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். இருவரும் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
Recommended Video
இந்திய வரலாற்றில் ஏற்கனவே ஒரு முக்கிய நிகழ்வு பதிந்து இருக்கும் நிலையில் நாளையும் ஒரு முக்கிய நிகழ்வு பதிய இருக்கிறது. அதுதான் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டத்தை அகற்றுவது, அயோத்தியில் ராமர் கோயில் இவை இரண்டும் பாஜகவின் முக்கிய கொள்கைகளில் இடம்பிடித்து இருந்தன. கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. நாளை அதே நாளில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது.
ராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்
ராமர் கோயில்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இருந்தே ராமர் கோயில் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வந்தாலும், தற்போது பிரதமர் மோடி தலைமையில் கை கூடியுள்ளது. மோடி தலைமையில் இரண்டாவது முறை தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்த நிலையில் கோயில் கட்டுவதும் கைகூடியுள்ளது.
முரளி மனோகர்
நாளை அயோத்தியில் பிரம்மாண்டமாக பூமி பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள சிலருக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அழைப்பு இல்லை. மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கும் அழைப்பு இல்லை. ஆனால், 53 வயது இக்பால் என்பவருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஏன் அவருக்கு மட்டும் முக்கியத்துவம்.
146 எண்ணில் இக்பால்
அயோத்தி கோயில் அழைப்பிதழில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் பெயருடன் இந்த இக்பால் பெயரும் இடம் பெற்றுள்ளது. இக்பாலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் 146 என்ற எண் இடம் பெற்று இருந்தது. அதில் இந்தியில் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. அயோத்தியில் நடக்கும் பூமி பூஜை, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மதியம் 12.30 மணிக்கு நடக்கிறது. அதில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஹஷிம் அன்சாரி
அயோத்தியில் மசூதி இருக்கும் இடத்தை இந்துக்கள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பது சட்டத்திற்கு விரோதமானது என்று 1952ல் ஐந்து முஸ்லிம்கள் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்களில் ஒருவர் ஹஷிம் அன்சாரி. வழக்கை தொடர்ந்து நடத்தி வந்த ஹசிம் அன்சாரி 2016ஆம் ஆண்டில் 96 வயதில் இறந்தார். இதையடுத்து, இவருக்குப் பின்னர் இந்த வழக்கை தனது மகன் இக்பால் அன்சாரி நடத்துவார் என்று நியமனம் செய்தார்.
உச்ச நீதிமன்றம்
இதையடுத்து கடந்தாண்டு அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்திற்கு கீழே கோயில் கட்டிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் இந்திய தொல்லியல்துறைக்கு கிடைத்து இருப்பதாகவும், இதன் அடிப்படையில் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதை அப்போது இக்பால் அன்சாரி ஒருமானதாக ஏற்றுக் கொண்டார். இவர் தையல்காரராக பணியாற்றி வருகிறார்.
மேல்முறையீடு
சட்டம் வழியாகத்தான் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதில் இக்பாலின் தந்தையும் உறுதியாக இருந்தார். அதையேதான் இறுதியில் இக்பால் அன்சாரியும் பின்பற்றினார். தீர்ப்பு வந்த பின்னர் தன்னை அகில இந்திய முஸ்லிம் சட்ட போர்டில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்தார். மேல்முறையீட்டுக்கு செல்ல இந்த போர்டு தயாராக இருந்தபோது, இக்பால் தயாராக இல்லை.
தலையிட மாட்டேன்
அப்போது, ''மேல்முறையீட்டுக்கு செல்வதால் எந்தப் பலனும் இல்லை. மீண்டும் அதே தீர்ப்புதான் கிடைக்கப் போகிறது. இணக்கமான சூழலே நல்லது. இந்த நிலையில், மசூதி, ராமர் கோயில் சிக்கலுக்கு இறுதி முடிவு கட்ட இருக்கிறேன். இதில் இனி தலையிட மாட்டேன். விழாவில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடிக்கு இந்துக்களின் புனித நூலான ஸ்ரீராமச்சந்திர மானஸ் கொடுக்க இருக்கிறேன்'' என்று இக்பால் தெரிவித்து இருந்தார்.
மறக்க வேண்டும்
இந்த நிலையில்தான் இவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, இக்பால் கூறுகையில், ''ஏன் நான் பூமி பூஜைக்கு செல்லக் கூடாது. இந்த விழாவுக்கு பிரதமரும் வருகிறார். பழையதை மறக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை கடந்து செல்ல வேண்டும். இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்தான். ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். அயோத்தி ஆன்மீக நகரம். சட்டத்தின் முன்தான் நானும், எனது தந்தையும் போராடினோம். ஆனால், மக்கள் முன்போ அல்லது அவர்களது நம்பிக்கை முன்போ அல்ல'' என்று தெரிவித்துள்ளார்.
சதி நடந்ததா
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதி நடந்து இருப்பதாக கூறப்படுகிறது, இதில் உங்களது கருத்து என்னவென்று கேட்டதற்கு, ''நான் அதைப் பற்றி பேச தயாராக இல்லை. பாலத்திற்கு கீழே தண்ணீர் இருக்கிறது. அங்கு செல்வதற்கு நான் விரும்பவில்லை'' என்றார்.
ரமேஷ் பாண்டே
இவருடன் மற்றொரு பெண்ணுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் பெயர் காயத்ரி தேவி, அயோத்தியில் ராணி பஜாரில் இருந்து சுமார் ஒரு கி. மீட்டர் தொலைவில் குடியிருந்து வருகிறார். இவருக்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 1990 நவம்பர் 2 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு மூன்றாவது நாளாக நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரமேஷ் பாண்டே உயிரிழந்தார். அவரது மனைவிதான் இந்த காயத்ரி தேவி. ஆதலால் இருவருக்கு அழைப்பிதழ் சென்றுள்ளது.
நான்கு குழந்தைகள்
இதுகுறித்து காயத்ரி தேவி கூறுகையில், ''எனக்கு அழைப்பிதழ் வந்துள்ளது. விழாவில் கலந்து கொள்வது என்று முடிவு செய்து இருக்கிறேன். விழாவில் கலந்து கொள்வதன் மூலம் எனது கணவரின் ஆத்மா சாந்தி அடையும். அவர் இறக்கும்போது நான்கு குழந்தைகளை விட்டுச் சென்றார். என்னிடம் சிறிய அளவில்தான் பணம் இருந்தது. குழந்தைகளை எப்படியோ காப்பாற்றி விட்டேன். தற்போது அவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது'' என்று தெரிவித்துள்ளார். இவரது இரண்டு மகன்களில் ஒருவர் கோயிலின் கார்யசாலாவில் பணியாற்றி வருகிறார்.