வரலாற்று சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம்.. இனி ஆப்கானில் இந்தியா- ஈரான் இணைந்து 'தலிபான் வேட்டை'
டெல்லி: அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடன் ஈரான் வரலாற்று சிறப்புமிக்க அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இந்தியாவும் ஈரானும் இணைந்து தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரான் அணு குண்டு தயாரிக்கத்தான் அணுசக்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் அதை ஈரான் மறுத்தது.
மின்சக்தி உள்ளிட்ட ஆக்கப்பூர்வ செயல்களுக்காகத்தான் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஈரான் கூறிவந்தது. அதை மேற்கத்திய நாடுகள் ஏற்கவில்லை.
அணுசக்தி திட்டங்களை கைவிடுமாறு அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகள் கூறியும் ஈரான் அதை நிராகரித்தது. இதனால் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், அந்த நாடுகளுடன் பேச்சு நடத்த ஈரான் முன்வந்தது.
ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் 18 நாட்களாக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது வரலாற்றுச்சிறப்புமிக்க ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தம் மூலமான இந்தியாவுக்கான சாதக அம்சங்கள்:
- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் உருவான நிலையில் அந்நாடு மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும்.
- இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏராளமான சாதகமான அம்சங்கள் உள்ளன.
- மங்களூர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எஸ்ஸார் ஆயில் ஆகியவை உடனடியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் இறங்கிவிடும்.
- ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இது இந்தியாவுக்கு சாதகமான ஒன்றாகும்.
- ஆப்கானிஸ்தானில் அரசியல் நிலைத்தன்மையை உருவாக்க இந்தியா மற்றும் ஈரான் இணைந்து செயல்படவும் வாய்ப்பாக அமையும்.
- ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் உளவு தகவல்களை பரிமாறிக் கொண்டதில் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது. தற்போது இந்தியாவும் ஈரானும் இணைந்து ஆப்கானிஸ்தானில் நிலைமையை சீரமைக்க முடியும்.
- இந்த ஒப்பந்தத்தால் தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஈரான் களமிறங்குவதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆட்சேபிக்கவும் வாய்ப்பில்லை என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.