ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கம்... இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும்?
டெல்லி: ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமான அளவில் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரானின் நடவடிக்கைகள் மீது திருப்தி அடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அந்நாட்டு மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளன.
இதனால் ஈரானிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்களை இனி இந்தியா கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இறக்குமதி செய்யமுடியும். மேலும் பொருளாதார தடை நீக்கப்பட்டநிலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தினமும் 5 லட்சம் பீப்பாய் வீதம் விரைவில் அதிகரிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஈரானிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை தடையின்றி இறக்குமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்று 25 டாலர் அளவுக்கு சரிந்துள்ளது. தற்போது ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் பெட்ரோலியப் பொருட்களின் விலை இன்னமும் கணிசமான அளவுக்கு இந்தியாவில் குறையும் நிலை உருவாகி உள்ளது.