ஈராக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.. மீட்க செல்கிறது விமானப் படையின் "சூப்பர் ஹெர்குலிஸ்"?
டெல்லி: ஈராக்கில் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான விமானப் படையின் சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான சதாம் உசேனின் ஆதரவுப் படையான சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுதமேந்தி போராடி வருகிறது. ஈராக் அரசு கட்டுப்பாட்டில் இருந்த பல நகரங்கள் இப்போது சதாம் ஆதரவுப் படை வசமாகி உள்ளன.
இந்த நிலையில் சதாம் ஆதரவுப் படை வசமுள்ள நகரங்களில் பணியாற்றி வந்த இந்தியர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஈராக்கில் மொத்தம் 18 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட இந்தியர்கள்
சதாம் ஆதரவுப் படையினர் வசமான மொசூல் நகரத்தில் 40 இந்தியர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் 39 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தத்தளிக்கும் தமிழக, கேரள செவிலியர்கள்
மொசூல் நகரத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திக்ரீத் நகரில் 46 கேரள செவிலியர்கள் தத்தளித்து வருகின்றனர். இதேபோல் தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த 6 செவிலியர்களின் கதி என்ன என்பதும் தெரியவில்லை.
தெலுங்கானாவின் 600 பணியாளர்கள்
மேலும் தெலுங்கானா மாநிலத்தின் 600 பணியாளர்களும் ஈராக்கில் தத்தளித்து வருகின்றனர்.
சிறப்பு பிரதிநிதி
இந்த நிலையில் ஈராக்குக்கு சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விமானம் செல்கிறது?
இதனிடையே ஈராக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு விமானப் படையின் சி-13- சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தை அனுப்பி வைக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.