மீனவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைகோள்.. நாளை செலுத்தப்படுகிறது!
ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைகோள் நாளை ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது.
ஸ்ரீஹரிகோட்டா: ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ என்ற செயற்கைகோள் நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்படஉள்ளது. அதற்கான கவுன்ட்டவுன் நேற்று இரவு 8.04 மணிக்கு தொடங்கியது.
கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோளை இஸ்ரோ விண்வெளிக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது. தற்போது வரை 7 செயற்கைகோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ எனப்படும் 9-வது செயற்கைகோள் நாளை அதிகாலை 4.04 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் அனுப்பப்பட உள்ளது.
பாதுகாப்புத்துறைக்கு உதவும்வகையில், நீர்மூழ்கி, மற்றும் சரக்கு கப்பல்கள், கார்கள், விமானங்கள், வாகனங்கள் அனைத்து வகையான போக்குவரத்தின் இருப்பிடங்கள், பயண நேரம் போன்றவற்றினை ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைகோள் உடனுக்குடன் தெரிவிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த செயற்கைகோளிலிருந்து பெறும் தகவல்கள் மீனவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக வானிலை எச்சரிக்கை, தாங்கள் இருக்கும் கடல்பகுதி, மீன்பிடிமண்டலங்கள் போன்றவற்றினை இந்த செயற்கைகோள் மூலம் மீனவர்கள் அறிந்துகொள்ள இயலும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.