16 ஆண்டுகால தொடர் உண்ணாவிரதத்தைக் இன்றுடன் கைவிடுகிறார் மணிப்பூர் இரோம் சர்மிளா
இம்பால்: மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா, 16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை இன்றுடன் முடித்துக் கொள்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இரோம் சர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 42 வயதான அவர் உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மூலம் உயிர் வாழ்ந்து வருகிறார்.
2000-ம் ஆண்டு, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் பாதுகாப்பு வழங்கியது.
அந்த சட்டம், சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் சுட்டுக்கொல்வதற்கு பாதுகாப்பு படைக்கு அதிகாரம் தருகிறது. அதை எதிர்த்து முறையிடவும் முடியாது. இதனைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் இரோம் சர்மிளா. அப்போது முதல் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததற்காக அவர் பல முறை கைது செய்யப்பட்டுளார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரோம் ஷர்மிளா. இம்பால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இவ்வளவு ஆண்டுகளாக போராடியும் அரசு கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதனால் உண்ணாவிரதத்தை ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி முடித்துக்கொள்கிறேன்.
மேலும் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட உள்ளேன். எனது போராட்டம் தொடரும். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். இவ்வாறு இரோம் சர்மிளா கூறினார். அதன்படி தனது 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை இன்று இரோம் ஷர்மிளா முடித்துக்கொள்கிறார்.