காஷ்மீர்.. ஜம்மு.. லடாக்.. மூன்றாக பிரிக்க திட்டமிடுகிறதா மத்திய அரசு.. ஆகஸ்ட் 15ல் என்ன நடக்கும்?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய பாஜக அரசு மூன்றாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய பாஜக அரசு மூன்றாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ச்சியாக குவிக்கப்பட்டு வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அங்கு 75000 வீரர்கள் புதிதாக குவிக்கப்பட்டு உள்ளனர்.
பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து மத்திய பாஜக அரசு இப்படி செய்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில் முக்கியமான விஷயம் ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பது!
மாநிலம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்தியாவில் கொஞ்சம் வித்தியாசமான மாநிலம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிப்பதற்காக சுதந்திரம் அடைந்த பின் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அப்போதில் இருந்து சிறப்பு அதிகாரத்துடன், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்துள்ளது. காஷ்மீரின் தனித்துவத்தை 370 மற்றும் 35ஏ சட்டங்கள் பாதுகாக்கிறது.
என்ன சட்டம்
370 சட்டம் மூலம் காஷ்மீர் தனியாட்சி அதிகாரத்துடன் உள்ளது. அம்மாநிலத்திற்கான சட்டங்களை அவர்களே இயற்றிக்கொள்ள முடியும். அதேபோல் சுயாட்சி அதிகாரங்களையும் இந்த சட்டம் அளிக்கிறது. 35ஏ சட்டம், அங்கு மற்ற இந்திய மாநில மக்கள் நிலம் வாங்குவதை தடை செய்கிறது. இந்த இரண்டு சட்டங்களும் நிறைய எதிர்ப்பை சந்தித்துள்ளது.
என்ன நீக்கம்
இந்த நிலையில் இந்த இரண்டு சட்டங்களையும் மத்திய பாஜக அரசு நீக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் மொத்தமாக இந்த சட்டத்தை நீக்கினால் பிரச்சனை வரும் என்பதால் வேறு புதிய யோசனையை பாஜக கையில் எடுத்துள்ளது என்கிறார்கள்.
ஏன் இல்லை
அதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று மூன்றாக பிரிக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதில் எப்போதும் போல காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை அளித்துவிட்டு, ஜம்மு மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
பிரிவினை
இதன் மூலம் காஷ்மீர் மிக மிக சிறிய பகுதியாக சுருங்கும். அங்கு மக்களை கட்டுப்படுத்துவது எளிமையாகும். பிரிவினைவாதிகளுக்கு இடையில் பிரிவினை ஏற்படும். அதன்பின் காஷ்மீரில் இருந்தும் மொத்தமாக 370 மற்றும் 35ஏ சட்டங்களை எளிதாக நீக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
என்ன அறிவிப்பு
இதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின் போது வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஆகஸ்ட் 15ல் வெளியாக உள்ள இந்த அறிவிப்பால்தான் தற்போது காஷ்மீரில் ராணுவத்தை குவித்து, அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அரசு கொண்டு வருகிறது என்கிறார்கள்.