ரூபாய் நோட்டு தடை.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
ரூபாய் நோட்டு விவகாரத்தில் 9 கேள்விகளை எழுப்பி வழக்கு விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான 500 1000 செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் ரகசியம் கடைபிடிபக்கப்பட்டதா? போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதா என்பன உள்ளிட்ட 9 கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்து வழக்கின் விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் சாசன விதிமுறைகளுக்கு புறம்பாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் செயல்பட்டுள்ளதாக கூறி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகில் ரோத்தகி ஆஜரானார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் ரகசியம் காக்கப்பட்டதா என்றும், தேவையான முன்னேற்பாடுகளை மத்திய அரசு செய்ததா என்பன உள்ளிட்ட 9 கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர்.
வாரத்திற்கு 24 ஆயிரம் எடுத்துக் கொள்ளலாம் என நிர்ணயித்து விட்டு பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பது ஏன் என்றும் நீதிபதிகள் வினா எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முகில் ரோத்தகி சேமிப்பு கணக்கில் அதிக பட்ச தொகையாக 24 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அவ்வாறு நிர்ணயம் செய்துவிட்டு 10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதிப்பது ஏன் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் தரப்பில் தேசிய தலைநகர வங்கிகளில் கூட பணம் இல்லாமல் பணப்பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்தார். அப்போது மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முகில் ரோத்தகி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். ஏடிஎம்களில் போதிய பணம் இல்லை, கூட்டுறவு வங்கிகள் பாரபட்ச நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.