எடியூரப்பாவின் பதவி விலகல் உரை: 1996ல் லோக்சபாவில் வாஜ்பாய் ஆற்றிய உரைக்கு நிகரானதா?
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக எடியூரப்பா ஆற்றிய உரை பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
பெங்களூரு : நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக கர்நாடக சட்டபையில் எடியூரப்பா ஆற்றிய உரை, 1996ல் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பு லோக்சபாவில் வாஜ்பாய் ஆற்றிய உரைக்கு நிகரானதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடக சட்டபைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், தனிப்பெரும் கட்சி என்கிற அடிப்படையில் ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் - மஜத கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் கூட்டாக வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
104 இடங்களைப் பெற்ற பாஜக, பெரும்பான்மையை நிரூபிக்க 7 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கப் பார்த்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நடக்க இருந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா பதவி விலகுவதாக அறிவித்தார். அவரது உரையில், காங்கிரஸின் சதியால், ஜனநாயகம் சீர்குலைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்ட காங்கிரஸ் - மஜத கட்சியினர் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர்.
சபதம் போட்ட எடியூரப்பா
இந்த சந்தர்ப்பவாத கூட்டணியால் எந்த நன்மையும் விளையாது. தனிப்பெரும் கட்சி என்பதன் அடிப்படையிலும், நல்லாட்சி வழங்கத் தகுதியான கட்சி என்கிற அடிப்படையிலும்தான் ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைத்தார். இதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் எந்த உறுப்பினரையும் விலைக்கு வாங்க முயற்சிக்கவில்லை. மனசாட்சியின் அடிப்படையில் வாக்களிக்குமாறுதான் கேட்டோம். ஆனால், காங்கிரஸ் பல்வேறு மோசடி வழிகளைக் கையாண்டது. வருகிற லோக்சபா தேர்தல் 28 இடங்களையும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் 150க்கும் அதிகமான இடங்களைப் பிடித்து பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
எடியூரப்பா ராஜினாமா
மேலும், தனது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும் தனது 20 நிமிட உருக்கமான உரையில் குறிப்பிட்டார். ஆனால், வாக்கெடுப்பிற்கு முன்னதாக எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் தொலைபேசியில் பேசி ஆசை வார்த்தைகள் காட்டியதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் வெளியிட்டது. இந்த குதிரை பேர விவகாரம் வெளியானதாலேயே, கட்சிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாகவே எடியூரப்பா ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எடியூரப்பா உரை
எடியூரப்பாவின் இந்த உரையை 1996ல் லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக வாஜ்பாய் ஆற்றிய உரையோடு ஒப்பிடுவது தவறு என்கிற வாதமும் எழுந்துள்ளது. அப்போது வாஜ்பாய் ஆற்றிய உரை, காரசாரமாகவும், கட்சியைக் காப்பாற்றும் வகையிலும் இருந்ததாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட அதற்கு எழுந்து நின்று கைதட்டியதாகவும் மூத்த தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், எடியூரப்பாவின் உரை முழுக்க முழுக்க தற்காப்புக்கானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.