பிரதமராக யார் அடுத்து வரக்கூடாது.. தீர்மானிக்குமா மம்தா பானர்ஜியின் கொல்கத்தா பேரணி?
கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று நடைபெறும் பேரணியும், மாநாடும் இந்தியாவின் அடுத்தப் பிரதமராக யார் வரக் கூடாது என்பதை தீர்மானிக்கும் பேரணியாக அமையலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இன்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பிரமாண்ட பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா முழுமையிலும் இருந்து 18 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கவுடா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசிய மாநாடு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, பாஜக அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் மாநாட் டில் பங்கேற்க உள்ளனர்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்பார்களா
காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோரும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவரும் கலந்து கொள்ள உள்ளனர். ஸ்டாலின் ஏற்கனவே ராகுலை பிரதமர் வேட்பாளாராக அறிவித்து விட்டார். ஆனால் மம்தா பானர்ஜி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாஜக எதிர்ப்பு மன நிலையில் உள்ள பிற கட்சிகளும் ராகுலை பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கவில்லை.
வித்தியாசமான சூழலில்
உ பி யில் இன்னும் ஒருபடி மேலே சென்று நேர் எதிரிகளான மாயாவதியும் அகிலேஷ் யாதவும் காங்கிரசை தவிர்த்துவிட்டு கூட்டணியே அமைத்து விட்டனர்.. தெலங்கானாவின் ஆளும் கட்சி யான தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சி யான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜக, காங்கிரஸ் இல்லாத கூட்டணியை ஆதரிக்கின்றன. இந்த நிலையில் இந்த மாநாடு தற்போதுள்ள அரசியல் சூழலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்
ராகுலை ஏற்கெனவே ஸ்டாலின் அறிவித்து விட்டதால் அந்த அறிவிப்பிலிருந்து ஸ்டாலின் பின்வாங்குவாரா? அல்லது இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் கட்சிகளை ராகுலை பிரதமராக ஏற்றுக்கொள்ள வைத்து தேசிய அரசியலில் மிகப்பெரும் தலைவராக ஸ்டாலின் உயர்வாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே தெரிகிறது. ஏனெனில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை உ பி தான் முடிவு செய்யும் என்று மாயாவதி அறிவித்தது அவருக்குள் இருக்கும் பிரதமர் வேட்பாளர் என்ற ஆசையை கோடிட்டு காட்டுகிறது. அதோடு சந்திரபாபு நாயுடுவுக்கும் பிரதமர் ஆசை உண்டு.
மமதா விட மாட்டாரே
அதே நேரத்தில் இன்று மாநாட்டை கூட்டியுள்ள மம்தா பானர்ஜி வெறுமனே மாநிலத் தலைவர் மட்டுமல்ல அவர் தேசியத்தலைவர் என்று பாஜக அதிருப்தி தலைவர்களுள் ஒருவரான சத்ருகன் சின்ஹா நேற்றே அறிவித்து விட்டார் ஆக ஸ்டாலின் ராகுலை பிரதமராக்கும் கோரிக்கையை அங்குள்ள தலைவர்களிடம் கூறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.
அதிர்ச்சி வைத்தியம்
மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இந்த மாநாட்டை உதிர கட்சிகளின் மாநாடு என்று பாஜக வர்ணித்துள்ளது, ஆனால் நடைபெறுகின்ற நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது இது மோடிக்கு மிகபெரும் அதிர்ச்சி வைத்தியத்தை அளிக்கும் மாநாடாகவே இருக்கப் போகின்றது என்பதுதான் எதார்த்தம். ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவோடு இருந்த கட்சிகள் எதுவும் இப்போது பாஜகவோடு அணுக்கமான நிலையில் இல்லை. அவர்களின் உற்ற தோழனான சிவசேனா நாளும், பொழுதும் பாஜகவை விமர்சனம் செய்வதிலேயே அவர்களின் பொழுது போகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியேறிவிட்டார்
காங்கிரஸ் அமைதி
தமிழகத்தில் பாமக, தேமுதிக ஆகியவை அவர்களோடு செல்வார்களா இல்லையா என்று இன்னமும் முடிவை அறிவிக்காத சூழலில் பாஜக எதிர்ப்பு பிராந்திய கட்சிகள் ஒன்று சேருவது நிச்சயம் பாஜகவுக்கு பிபியை எகிறவைக்கும் வைக்கும் என்பதில் ஐயமில்லை. ராகுலை பிரதமர் வேட்பாளாராக ஸ்டாலின் அறிவித்ததுமே காங்கிரஸ் தரப்பிலிருந்தே குறிப்பாக ப. சிதம்பரம் தரப்பிலிருந்தே அதிருப்தி கிளம்பியது. பிற மாநில கட்சிகளோ அல்லது காங்கிரசுடன் பயணிக்கலாம் என்று கருதும் கட்சிகள் கூட ராகுலை பிரதமராக வழி மொழியவில்லை. ஏன் காங்கிரசே கூட இன்னமும் அதை பிரதானப் படுத்த விரும்பவில்லை.
பாஜகவை அகற்ற வேண்டும்
காங்கிரசுக்கு இப்போது இருக்கும் ஒற்றை அஜண்டா, பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். யார் பிரதமர் என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்பதே காங்கிரசின் நிலைப்பாடும் கூட. ஆகவேதான் ராகுலும் நேற்று மம்தா பானர்ஜியின் மாநாட்டிற்கு தனது வாழ்த்து கடிதத்தை அனுப்பியுள்ளார். இது ராகுலின் மிகப்பெரிய ராஜதந்திரமாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது
ஆக இன்று கூடுகின்ற எதிர்க்கட்சி தலைவர்களும் சரி இந்த மாநாட்டை புறக்கணிக்கும் கம்யுனிஸ்ட் கட்சிகள், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, பிஜு ஜனதா தளம், மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்றோரும் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் சங்கமிக்கின்றனர்.
யார் வரக் கூடாது
இந்த சங்கமிப்பு அடுத்தப் பிரதமராக யார் வரக்கூடாது என்ற மாபெரும் சக்தியாக மாறும் என்பதில் ஐயமில்லை. அதோடு கடந்த காலத்தை சற்று திரும்பி பார்த்தோம் என்றால் 89-96 காலத்தில் 3- வது அணியை காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரித்தது, அதன் விளைவாக சந்திரசேகர், தேவேகௌடா, வி பி சிங் ஆகியயோர் இந்த நாட்டை ஆண்ட வரலாறுகளும் உண்டு. இப்போது ராகுலுக்கும் மோடிக்கும் நடைபெறும் இந்தப் போரில் ராகுலின் யுக்திகளும், எதிர்கட்சிகளின் வலிமையையும் ஒன்று சேரும்போது அடுத்தப் பிரதமராக யார் வரக்கூடாது என்பதை இந்த மாநாட்டிலேயே நிச்சயம் நிர்ணயித்து விடும்.