பட்ஜெட்: புஸ்ஸாகிப் போன பாதுகாப்புத் துறையின் எதிர்பார்ப்பு
பெங்களூர்: 2015-2016ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 9.46 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெறும் ரூ.23 ஆயிரத்து 357 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது பாதுகாப்புத் துறையில் அடுத்த 6 மாதங்களில் கொண்டு வரப்படும் கொள்கை மாற்றத்தை குறிப்பதாக உள்ளது.
ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டும் என்று கூறியவர்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் ஆலோசகர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி எம். மாதேஸ்வரன் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
நவீனமயமாக்கும் திட்டத்திற்கு கூடுதலாக 10 சதவீதம் நிதி ஒதுக்கியது உதவாது. உடனே பலன் அளிக்கும் பெரிய வியாபாரங்களை பார்த்துள்ளார் நிதி அமைச்சர். தொழில்நுட்ப மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உதவும். ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். இந்திய பாதுகாப்புத் துறையின் தயாரிப்பு பிரிவை ஊக்குவிக்க சில நல்ல கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறேன் என்றார்.
வரி குறைப்பு
மத்திய நிதி அமைச்சர் மேக் இன் இந்தியா திட்டம் பற்றி பேசியது நன்றாக இருந்தது. தொழில்நுட்பங்களின் ராயல்டிகளுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக இது திருப்திகரமான பட்ஜெட் என்று சாம்டெல் ஏவியானிக்ஸ் நிறுவன தலைவர் புனித் கவ்ரா தெரிவித்துள்ளார்.
பரவாயில்லை
எப்கேசிசிஐ துணை தலைவர் எம்.சி. தினேஷ் கூறுகையில், பிரதமர் மோடியின் அளவுக்கு மத்திய நிதி அமைச்சரின் பேச்சில் மேக் இன் இந்தியா பற்றிய துடிப்பு இல்லை. நமக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி பற்றாக்குறையாக உள்ளது. தயாரிப்பு துறை வளர வேண்டும் எனில் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
ராணுவ நவீனமயமாக்கல்
ராணுவ நவீனமயமாக்கலுக்கு தற்போது நிதி அமைச்சர் ஒதுக்கியுள்ள நிதி போதாது. கடந்த 10 ஆண்டுகளாக ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது என்று டெல்லியில் உள்ள லேண்ட் வார்பேர் ஸ்டடிஸ் மையத்தின் முன்னாள் தலைவர் குர்மீத் கன்வால் தெரிவித்துள்ளார்.
நாயர்
பாதுகாப்புத் துறைக்கு தேவையான பொருட்களை இந்தியாவில் தயாரிக்க மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று ஹெச்.ஏ.எல்லின் முன்னாள் தலைவர் டாக்டர் சி.ஜி. கிருஷ்ணதாஸ் நாயர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று ஏமாற்றம் அடைந்துவிடக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சரியே
பாதுகாப்புத் துறைக்கு சரியானதை செய்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் என்று ராடெல் குழும நிறுவன தலைவர் ஜி.ராஜ் நாராயண் தெரிவித்துள்ளார். உள்நாட்டு தயாரிப்புக்கு நல்ல நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.