கர்நாடகாவில் நாய் செத்தாலும் மோடி பொறுப்பா? கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து முத்தலிக் சர்ச்சை பேச்சு
படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை நாயுடன் ஒப்பிட்டு முத்தலிக் பேசினார்.
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு நாய் செத்தாலும் பிரதமர் மோடிதான் பொறுப்பா? என பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
கவுரி லங்கேஷை இந்துத்துவா தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அண்மையில் பரசுராம் என்ற தீவிரவாதி, கவுரி லங்கேஷ் எனக்கு யாரென்றே தெரியாது. ஆனால் இந்து மதத்துக்கு எதிரானவர் என்பதால் சுட்டுக் கொல்ல உத்தரவு வந்தது. அதனால் சுட்டுக் கொன்றேன் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பரசுராமும் ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக்கும் ஒன்றாக இருக்கும் படம் ஊடகங்களில் வெளியானது. பரசுராமுக்கும் ஸ்ரீராம் சேனாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரமோத் முத்தலிக், காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து யாரும் வாய் திறப்பதே இல்லை. இப்போதே பிரதமர் மோடி ஏன் படுகொலைகள் குறித்து மவுனம் காக்கிறார் என்கிறார்கள்.
கர்நாடகாவில் ஒரு நாய் செத்தாலும் கூட பிரதமர் மோடிதான் பொறுப்பாக வேண்டுமா? என்றார். கவுரி லங்கேஷை நாயுடன் ஒப்பிட்டு முத்தலிக் பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.