இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய மசூதி அவசியமா? பரபரப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுபெற உள்ள நிலையில் இந்த வாரம் சில முக்கிய தீர்ப்புகள் வழங்க உள்ளார். அதில் ஒன்று அயோத்தி, ராமர் கோயில் விவகாரம் தொடர்பானது.
ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ராமஜென்ம பூமி யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு தொடர்பான தீர்ப்பு இது கிடையாது. ஆனால் 1994 ஆண்டு தீர்ப்பு சுப்ரீம் கோர்ட் வழங்கிய, டாக்டர் இஸ்மாயில் பரூக்கி vs மத்திய அரசு வழக்கு தீர்ப்பு தொடர்பானது.
இஸ்லாம் மதத்திற்கு மசூதி என்பது மிகவும் அவசியமானது என்பது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோகன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நடக்கிறது.
1994ம் ஆண்டு அயோத்தி சட்டம், தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய எம்.வி.வர்மா, ஜி.ராய் மற்றும் பருச்சா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, இஸ்லாம் மத அடிப்படையில், தொழுகை நடத்துவதற்கும் இஸ்லாமிய மதக் கடமைகளை செய்வதற்கு மசூதி என்பது அவசியமானதா என்பது தொடர்பான அம்சங்களுடன் கூடிய தீர்ப்பை வழங்கின.
முஸ்லிம்களுக்கு மசூதி என்பது அவசியமான ஒன்று கிடையாது. முஸ்லிம்கள் எந்த இடத்திலும் எங்கே இருந்தும்கூட, ஏன், திறந்தவெளியில் கூட இவற்றை செய்ய முடியும். இந்த நடைமுறை இந்திய அரசியல் சாசனப்படி தடை செய்யப்படவில்லை.
நீண்டகால நன்மைக்காக எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு தலங்களையும் அரசு கையகப்படுத்த முடியும். அதே நேரம் ஒரு மதத்தினரின் வழிபாட்டு உரிமையை பாதிக்காத வகையில் அது இருக்க வேண்டும். அதாவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பிற மத வழிபாட்டு தலங்களை கையகப்படுத்த முடியும் என்பதை போலவே, மசூதி இடத்தையும் கைப்பற்ற முடியும். இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
சன்னி வக்பு வாரியம் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டின்போது வாதிடும்போது, இஸ்லாமிய மதத்தில் மசூதி என்பது தொழுகை உள்ளிட்ட பிற மத நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது இஸ்லாமிய அடிப்படையேயே உலுக்கும் வகையில் உள்ளது என்று வாதிட்டார்.
இந்த வழக்கில்தான், இவ்வாரத்தில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டால் ராம ஜென்மபூமி இடம் யாருக்கு சொந்தம் என்ற முக்கியமான வழக்கில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் ராமர் கோவிலை கட்ட முடியுமா, முடியாதா என்பது தெரியவரும் என்கிறார்கள்.