"ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி".. மொழிபெயர்ப்பு குளறுபடி உண்மையா?.. நடந்தது என்ன தெரியுமா?
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அருகில் எழுதி இருக்கும் தவறான தமிழ் மொழி பெயர்ப்பு உண்மையா, பொய்யா என்ற விவாதம் எழுந்துள்ளது.
Recommended Video
காந்தி நகர்: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அருகில் எழுதி இருக்கும் தவறான தமிழ் மொழி பெயர்ப்பு உண்மையா, பொய்யா என்ற விவாதம் எழுந்துள்ளது.
குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.
இதற்கான பெயர் பலகை நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அதாவது பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்த அதில், தமிழில் இடம் பெற்றிருந்த மொழிபெயர்ப்பு பெரும் சர்ச்சையானது.
சர்ச்சை
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டு என்று அதில் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரல் செய்து விட்டனர் மக்கள். ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்று மோசமாக மொழிபெயர்த்தது கண்டனத்தை கிளப்பியது.
பொய்யா ?
இந்த நிலையில் தற்போது, சிலைக்கு அருகே அப்படி எதுவும் போர்ட் வைக்கப்படவில்லை. அப்படி போர்ட் வைக்கப்பட்டதாக வந்த புகைப்படங்கள் அனைத்தும் பொய்யானது என்று குஜராத் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த சில உயரதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வருகிறது. தமிழகத்தை சேர்ந்த சில பாஜக நிர்வாகிகளும் அந்த மொழிபெயர்ப்பு குறித்த செய்தியை தவறு என்று மறுத்துள்ளனர்.
உண்மை என்ன
இந்த நிலையில் பிபிசி செய்தி நிறுவனம் அந்த புகைப்படம் உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தி உள்ளது. பிபிசி போட்டோகிராபர் அந்த பலகை அங்கு இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார். பிபிசி குஜராத் சேவையின் செய்தியாளர் தேஜஸ் வைத்யா, நேரில் சென்று இதை போட்டோ எடுத்தேன் என கூறியுள்ளார். அவர் எடுத்த அந்த தவறான மொழிபெயர்ப்பு பலகையின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
அதுமட்டுமா
மேலும் தமிழில் எழுதப்பட்டு இருந்த அந்த வரிகள் பிரச்சனை காரணமாக வெள்ளை மை வைத்து மறைக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார். சர்ச்சை காரணமாக இப்போது அந்த பெயர் பலகை நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த பெயர் பலகையில் ஹிந்தி, மராத்தி மட்டுமே சரியாக இருந்தது என்றும் அரபி உள்ளிட்ட மேலும் சில மொழிகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குட்டு உடைந்தது
இதற்கிடையே, தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தவறான மொழி பெயர்ப்பு திருத்தப்படும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் தவறு நடந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது. சிலை திறப்பு விழாவில் பாண்டியராஜனும், இன்னொரு அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.