மம்தா கட்சி கரைய பிரசாந்த் கிஷோர் காரணமா..? மனம் குமுறி நிர்வாகிகள் விலகிச் செல்வது ஏன்..?
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.மற்றும் மூத்த நிர்வாகிகள் வரிசையாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை காட்டிலும் பிரசாந்த் கிஷோர் மீது மம்தா அதிக நம்பிக்கை வைத்ததன் விளைவாகவே இன்று அவர் கட்சியில் சலசலப்பு ஏற்படக் காரணமாக கூறப்படுகிறது.
மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டும் வகையில் மம்தாவிடம் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனை இன்று பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த முன்னோடி மோதிலால் வோரா காலமானார்... பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியானவர்..!
ஐ-பேக் நிறுவனம்
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான வியூகங்களை வகுத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா ஒப்பந்தம் செய்துகொண்டார். மம்தாவின் இந்த செயல்பாடு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலருக்கும் அதிருப்தியை கொடுத்தாலும் அதனை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தீதிக்காக (அக்காவுக்காக) அமைதி காத்து வந்தனர்.
வெடித்து புறப்பாடு
இந்நிலையில் இப்போது ஒவ்வொருவராக மம்தா மீதான தங்கள் மனக்குமுறலை கொட்டித்தீர்த்தவாறு கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதில் முக்கியமானவர் சுவேந்து அதிகாரி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பக்கால வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் இந்த சுவேந்து. மம்தாவுக்கு அடுத்த இடத்தில் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரிசையில் இருந்தவர். இவரைப்போலவே மம்தாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த முகுல் ராயும் இப்போது பாஜகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீதி கே போலோ
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் அந்தக் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் விலகும் அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை என ஆராய்ந்தால், ''தீதி கே போலோ'' (அக்காவிடம் சொல்லுங்கள்) என்ற பிரசாந்த் கிஷோரின் திட்டத்தில் வந்து நிற்கிறது. பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை குறைகளை மம்தாவிடம் சொல்லலாம் என்பதை தான் பிரசாந்த் கிஷோர் டீம் தங்களுக்கே உரிய பாணியில் அழகாக பிரசெண்டேஷன் செய்து அதை நடைமுறைப்படுத்தியது.
லிஸ்டை நம்பி
கூடவே கட்சிக்கு இவர்களால் தான் கெட்டப்பெயர் ஏற்படுகிறது என்ற லிஸ்ட் ஒன்றையும் தயாரித்து அதனை மம்தாவிடம் கொடுத்திருக்கிறது. அவரும் அந்த லிஸ்டில் இருக்கும் நபர்களை கட்சி செயல்பாடுகளில் ஓரங்கட்டத் தொடங்கியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ள பாஜகவுக்கு இது போதாதா, மம்தா மீது அதிருப்தியில் உள்ளவர்களின் லிஸ்டை தயார் செய்து தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது.
ஐ-பேக்
மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கம் ஐ-பேக் தான் தமிழகத்தில் திமுகவுக்கும் வகுத்துக் கொடுக்கிறது. ஆனால் இங்கு ஐ-பேக் நிறுவனத்தை குறிப்பிட்ட வரம்புக்குள் வைத்திருக்கிறது திமுக. மம்தா ஒரு வேளை இதைச் செய்யத் தவறியதால் தான் என்னவோ இப்போது கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.