தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையா? வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு!
தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையா என்பது குறித்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையா என்பது குறித்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் அரசாணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் ஆதார் என்பது தனிமனித சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி 2015ஆம் ஆண்டு கூறிய தனிமனித சுதந்திரம் என்பது, ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை இல்லை என மீண்டும் மீண்டும் கூறினார்.
மேலும் இந்த தீர்ப்பை மிகப் பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து தனிமனித சுதந்திரம், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து 9 நீதிபதிகள் அமர்வு இன்று முதல் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
தனி மனித உரிமை கேள்வி குறித்து 9 நீதிபதிகள் அரசியலமைப்பு பெஞ்ச்சில் தீர்க்கப்பட்டவுடன், ஆதார் தொடர்பான மீதமுள்ள பிரச்சினைகள் ஒரு சிறிய பெஞ்சில் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தனி மனித சுதந்திரத்துக்கு உரிமையுண்டு என்று பெரிய பெஞ்ச் முடிவு செய்திருந்தால், அதன் நோக்கத்தை சிறிய பெஞ்ச் வரையறுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 9 நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.