திமுகவின் கூட்டல் கணக்கு... சசிகலா புஷ்பாவை இணைக்க கனிமொழி பேச்சு?
டெல்லி: அதிமுக தலைமைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை ராஜ்யசபாவில் அடுக்கிய சசிகலா புஷ்பா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எம்.பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியுள்ள சசிகலா புஷ்பா விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கனிமொழி எம்.பி.தான் பாலமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா பலமுறை திமுகவுக்கு நன்றி தெரிவித்தார். ராஜ்யசபாவில் தனது பிரச்சினையை எழுப்ப, மற்ற கட்சி உறுப்பினர்கள் பலரும் சசிகலா புஷ்பாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
சசிகலா புஷ்பா பேசும்போது, காங்கிரஸ் கட்சியை அதிகமான முறையில் திமுகவுக்கு நன்றி தெரிவித்து பேசினார். இடையே ஒருமுறை திமுகவின் ராஜ்யசபா தலைவரை 'மேடம் கனிமொழி' எனக் குறிப்பிட்டு பேசினார்.
காங்கிரஸ் - திமுக
சசிகலா புஷ்பாவை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டது. அவர் சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் சந்திக்க நேரம் ஒதுக்கிக் கேட்ட நிலையில் சோனியா உபி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி விட்டதால் அது தொடர்பான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
திமுகவின் கூட்டல் கணக்கு
இதற்கிடையில் சசிகலா புஷ்பா திமுக எம்பியான கனிமொழியையும், திருச்சி சிவாவையும் சந்திக்க விரும்பினார். சசிகலா புஷ்பா விவகாரத்தில் திமுக ஒரு புதுக்கணக்கு போடுகிறதாம்.
ராஜ்யசபாவில் குழு
ராஜ்யசபாவைப் பொருத்தவரையில் ஒரு கட்சி ஐந்து உறுப்பினர்களை வைத்திருந்தால் மட்டுமே அவர்களை ராஜ்யசபா விதிகளின் படி ஒரு குழுவாக அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்களுக்கும் குறைவாக உள்ளவர்கள் தனி உறுப்பினர்களாகவே கணக்கில் கொள்ளப்படுவார்கள்.
திமுகவிற்கு 4 உறுப்பினர்கள்
திமுகவைப் பொருத்தவரை கனிமொழி.டி.கே.எஸ் இளங்கோவன், ஆலந்தூர் பாரதி,திருச்சி சிவா என நான்கு உறுபினர்களே உள்ளதால் இன்னும் திமுக ஒரு கட்சியாக ராஜ்யசபாவில் அங்கீகரிக்கப்படவில்லை.
ராஜ்யசபாவில் பேச வாய்ப்பு
ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தில் ஒதுக்குவது, பொதுவான பிரச்சனைகளில் கலந்து கொண்ட பேச நேரம் ஒதுக்குவது போன்ற முன்னுரிமைகள் இந்த குழுவினருக்கு கிடைக்கும். ஆனால் தனி நபராக இருந்தால் சில நேரம் பேச வாய்ப்பு கிடைக்கும், கிடைக்காமலும் போகும்.
முக்கியமற்ற நேரங்கள்
அவையில் பிரதான தலைவர்கள் இல்லாத முக்கியமற்ற நேரங்கள் கூட தனிநபர்களுக்கு ஒதுக்கப்படும். இது தவிர இவர்கள் முக்கியமாக பேச வேண்டும் என்றால் அவைத்தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற ஏராளமான பலவீனங்கள் தனிநபராக இருப்பதில் உண்டு. பெரும்பாலான நேரங்களில் திமுகவிற்கு பேச ஒதுக்கும் நேரமும் முக்கியமற்றதாகவே இருக்கிறது.
கனிமொழி பேச்சு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எந்தக் கட்சியில் இணைந்தாலும் அவருடைய பதவி பறிபோகாது. இதனால் சசிகலா புஷ்பாவை கட்சிக்குள் இழுத்தால் ராஜ்சபாவில் தங்களுக்கு 5 உறுப்பினர்கள் கிடைத்து தங்களையும் ஒரு குழுவாக அங்கீகரிப்பார்கள் என திமுக கணக்குப் போடுகிறது. இதை சாத்தியமாக்கி சசிகலா புஷ்பாவை திமுகவிற்குள் கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தையை கனிமொழி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சசிகலா புஷ்பாவின் முடிவு
அதிமுகவால் தன் உயிருக்கு தமிழகத்தில் ஆபத்து என புஷ்பா புகார் கூறி வருவதால் அவருக்கும் திமுகவில் சேர்வதே பாதுகாப்பாக இருக்கும் என அவர் கருதக்கூடும். எந்த கட்சியில் சேருவது என்று இதுவரை சசிகலா புஷ்பா முடிவெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கூட்டி கழித்து பார்த்து சசிகலா புஷ்பா விரைவில் ஒரு முடிவெடுப்பார்