சீன ஹேக்கர்களுக்கு மும்பை மின்வெட்டில் தொடர்பா? அமெரிக்க நிறுவனம் அறிக்கை; இந்தியாவின் பதில் என்ன?
இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக அறியப்படும் மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி திடீர் மின் வெட்டு ஏற்பட்டு நகரம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இருளில் மூழ்கிய விவகாரத்தில் விசாரணைக்கு மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருக்கிறார்.
https://twitter.com/AnilDeshmukhNCP/status/1366409077711020035
திடீர் மின்வெட்டுக்கான காரணத்தை மாநில மின் விநியோகத்துறை அறிய முடியாத நிலையில், கடந்த திங்கட்கிழமைதான் முதன்முதலாக மகாராஷ்டிர மாநில மின்துறை அமைச்சர் நிதின் ரெளத், அது ஓர் இணையவழி ஊடுருவலாக (சைபர் தாக்குதல்) இருக்கலாம் என்பதை ஒப்புக் கொண்டது போல ஒரு கருத்தை வெளியிட்டார்.
அதில் மின் வெட்டு ஊடுருவல் தொடர்பான அறிக்கை தன்வசமும் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடமும் சைபர் காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை விரைவில் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
https://twitter.com/NitinRaut_INC/status/1366397905750298627
இந்த நிலையில், அமெரிக்காவின் மாஸ்ஸாஷூசெட்ஸ் பகுதியை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரெர்கார்டட் ஃபியூச்சர் ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த நிறுவனம், பல்வேறு நாடுகளில் நிலவும் இன்டர்நெட் மின் தடை பற்றிய ஆய்வை நடத்தி அதற்கான காரணத்தை அறிய முற்படும் வழக்கத்தை கொண்டுள்ளது.
அந்த நிறுவன அறிக்கையில், இந்திய மின் நிறுவனங்களை இலக்கு வைத்து ரெக் எக்கோ என்ற குழு மால்வேர் எனப்படும் தகவல் திருட்டு சாதகமுள்ள செயலியை ஊடுருவச் செய்துள்ளதாக கூறியுள்ளது.
- "சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக்கை குறிவைத்த சீன ஹேக்கர்கள்"
- உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?
அந்த செயலி மூலம் தானியங்கியாக செயல்படும் மின் விநியோக பணி மற்றும் ஆய்வுத்திறனை முடக்க முடியும் என்று ரெக்கார்டட் ஃபியூச்சர் என்ற நிறுவனம் கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்தே மும்பை காவல்துறையின் சைபர் பாதுகாப்புத்துறை தனது தரப்பு விசாரணையை தொடங்கி அதன் ஆரம்பநிலை அறிக்கையை மகாராஷ்டிர மாநில அரசிடம் அளித்திருக்கிறது.
ரெக் எக்கோ என்ற குழு சீன தொடர்புடையது என்பதால், இதில் சீனாவின் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகமும் சர்ச்சையும் வலுத்து வருகிறது. ஆனால், இது குறித்து இந்திய அரசு இதுவரை நேரடியாக எந்த கருத்தையும் சீனாவை குறிப்பிட்டு வெளியிடவில்லை.
"அக்டோபர் 12" என்ன நடந்தது?
கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி, மும்பை நகரின் பெரும்பாலான பகுதிகள், மின் விநியோகத் தடையால் சில மணி நேரம் இருளில் மூழ்கின. பெருநகர பகுதியின் பல இடங்களின் மின் தடையின் தாக்கம் இருந்தது.
இதன் காரணமாக உள்ளூர் ரயில் சேவை பாதியிலேயே தடை பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக மும்பையில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் மற்றும் அதைத்தொடர்ந்து பல இடங்களில் பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. மின் தடை காரணமாக அந்த வகுப்புகள் அனைத்தும் மும்பை நகரில் தடை பட்டன.
மும்பை மத்திய பகுதி, தானே, ஜோகேஷ்வரி, வடாலா, செம்பூர், போரிவாலி, தாதர், கண்டிவாலி, மிரா சாலை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டது.
தொடக்கத்தில் இதை சாதாரணமான மின் தடை என்றே மக்கள் கருதிய நிலையில், இது மின் விநியோக பொறியியல் கோளாறு இல்லை என்றும் சீன ஹேக்கர் குழுவின் கைவரிசை என்றும் அமெரிக்க ஆய்வு நிறுவனமான ரெக்கார்டட் ஃபியூச்சர் கூறியுள்ளது.
இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு தொடக்கம் முதலே இந்தியாவின் முக்கிய மின் தயாரிப்பு அல்லது விநியோக நிறுவனங்களில் சீன ஆதரவு குழு மிகப்பெரிய அளவில் அதன் மேல்வார் செயலியை ஊடுருவச் செய்திருப்பதாக ரெக்கார்டட் ஃபியூச்சர்ஸ் இன்ஸ்டின்க்ட் குழு தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையை முதலில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட பிறகே இந்த விவரம் உலகுக்கு தெரிய வந்தது.
இதேவேளை, இந்தியாவில் மின் விநியோகம் தடைபட்டதன் பின்னணியில் சீனா இருப்பதாக கூறப்படும் தகவலை சீன வெளியுறவுத்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை பேசிய அதன் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பிங், ஆதாரமில்லாமல் பொறுப்பின்றியும் தவறான உள்நோக்கத்துடனும் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவித்தார்.
இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமெரிக்க எம்.பி
இந்த நிலையில், இந்திய மின் விநியோக தடை விவகாரத்தில் இந்தியாவுக்கு சாதகமாக கருத்து வெளியிட்டிருக்கிறார் அமெரிக்க எம்.பி ஃபிராங்க் பலோன்.
https://twitter.com/FrankPallone/status/1366524710708731905
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவு நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் கேந்திர கூட்டாளியாக உள்ள இந்தியாவுக்கு துணையாக அமெரிக்கா இருக்க வேண்டும் என்றும் இந்திய மின் விநியோகம் மீதான சீனாவின் தாக்குதல் அபாயகரமானதாக இருக்கும் என்றும் ஃபிராங்க் பலோன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பதில் என்ன?
இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை இந்திய மின்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், குறிப்பிட்ட சைபர் தாக்குதல், எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், எந்த இடத்திலும் அந்த தாக்குதல் மும்பை மின் பாதையை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவோ அதில் சீன சைபர் குழு இருந்ததாகவோ இந்திய அரசு குறிப்பிடவில்லை.
பிற செய்திகள்:
- "1980" தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் வென்றது எப்படி?
- தமிழக தேர்தல் களம்: தொகுப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்றைய நிலவரம் என்ன?
- பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக நியமனம் - சம்பளம் ஒரு ரூபாய்
- பெண் எஸ்பி பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபியை விசாரிக்க பெண் எஸ்பி நியமனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: