சென்னை, டெல்லி, மும்பை ரயில் நிலையங்களை தகர்ப்போம்... ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!
இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று தீவிரவாதிகள் மிரட்டல் வீடுத்துள்ள நிலையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து ரயில்வே துறை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் பதற்றம் நிலவுகிறது.
மின்னஞ்சல் மூலம் வந்த தகவலின்படி, ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் உள்துறை அமைச்சகம் மற்றும்,மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பரபரப்பு அடைந்துள்ளனர்.எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில்,பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்திற்குள் நாடு முழுவதும் இந்த தாக்குதலை நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும், இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க திட்டமிட்டிருப்பதாகவும் மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது .
எனவே இந்தியா முழுக்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் அந்தந்த மாநில போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.