இஷ்ரத் என்கவுன்ட்டர்: குஜராத் போலீஸ் மீதான கிரிமினல் வழக்குகளை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யுமா?
டெல்லி: இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக குஜராக் போலீஸ் அதிகாரிகள் சிலர் மீதான கிரிமினல் வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்ப்ராவை சேர்ந்த இளம்பெண் இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 ஆண்கள் கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். தீவிரவாதிகளான அவர்கள் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டதால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இஷ்ரத் உள்ளிட்டவர்கள் அப்பாவிகள் என்றும், குஜராத் போலீசார் போலி என்கவுன்ட்டர் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த என்கவுன்ட்டர் உண்மையா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்த வழக்கு அகமதாபாத்தில் உள்ள மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் 2009ம் ஆண்டு தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இஷ்ரத் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த சிறப்பு குழு அந்த என்கவுன்ட்டர் போலி என்றும், குறிப்பிட்ட தேதிக்கு முன்பே அந்த 4 பேரும் கொல்லப்பட்டதாக 2011ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. குஜராத் போலீசார் திட்டமிட்டே என்கவுன்ட்டர் நடத்தியதாகக் கூறி 2013ம் ஆண்டு ஜுலை மாதம் 13ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இது குறித்து சில போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த சூழலில் இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவரிவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி என 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் வாக்குமூலம் அளித்த தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்தார்.
இதையடுத்து இஷ்ரத் விவகாரம் குறித்து குஜராத் போலீஸ் அதிகாரிகள் சிலர் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யுமாறு வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இஷ்ரத் ஜஹான் வழக்கில் குஜராத் நீதிமன்றத்தில் போலி அபிடவிட் தாக்கல் செய்தது தொடர்பாக முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவரும் இதே சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.