இஷ்ரத் என்கவுண்ட்டர்- அமித்ஷா விடுவிப்பு தொடர்பாக சிபிஐ- மத்திய அரசு இடையே மோதல்
டெல்லி: இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுவிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ, மத்திய அரசு இடையே மோதல் வெடித்துள்ளது.
2004ஆம் ஆண்டு மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேரை தீவிரவாதிகள் என குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
அண்மையில் தாக்கல் செய்த 2வது குற்றப் பத்திரிகையில் 4 ஐபி அதிகாரிகள் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த என்கவுண்ட்டருக்கு காரணமாக சொல்லப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா பெயர் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் "இஷ்ரத் ஜஹான் வழக்கில் சில அரசியல் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஒருவேளை அமித் ஷா பெயர் சேர்க்கப்பட்டிருந்தால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மகிழ்ந்திருக்கும்" என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியதாக செய்திகள் வெளியாகின.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கம் அளித்த ரஞ்சித் சின்ஹா, நாங்கள் நேர்மையான விசாரணையை நடத்தினோம். எங்களுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. அமித் ஷா மீதான புகாருக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. என் கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுவிட்டன என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
இருப்பினும் ரஞ்சித் சின்ஹாவின் கருத்துகளை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜூன் மோத்வாடியா, இஷ்ரத் ஜஹான் வழக்கில் முக்கிய சதிகாரரை சிபிஐ தொடவே இல்லை என்பது துரதிருஷ்டவசமானது என்றார்.
பாஜகவோ, அரசியல் சாசன அமைப்புகளை காங்கிரஸ் துஷ்பிரயோகம் செய்கிறது என்பதற்கான சான்று இது என்று கூறியுள்ளது.
ஏற்கெனவே சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக பெரும் மோதல் உருவாகியிருந்த நிலையில் தற்போது இஷ்ரத் வழக்கிலும் மோதல் வெடித்துள்ளது.