இஷ்ரத் என்கவுண்ட்டர்: ஐ.பி. முன்னாள் அதிகாரி ராஜிந்தர் குமாரை விசாரிக்க உள்துறை அனுமதி மறுப்பு!!
டெல்லி; இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கில் ஐ.பி. முன்னாள் அதிகாரி ராஜிந்தர் குமாரை விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
2004 ஆண்டு மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் 4 பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டனர் எனக்கூறி வழக்கை திசை திருப்ப மும்பை போலீசார் முயற்சித்தனர்.
இதையடுத்து போலீசார் கூறுவது உண்மை இல்லை என்றும், இந்த வழக்கை முடிக்க குஜராத் மாநில காவல் துறை உயரதிகாரிகள் பலர் முயற்சிக்கின்றனர்; இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இஷ்ரத் ஜஹான் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சுமார் 10க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்தது. அத்துடன் முதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
அதில் அப்பாவிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து போலி என்கவுன்டர் செய்ததாக 7 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ஐ.பி. முன்னாள் அதிகாரி ராஜிந்தர் குமாரும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் பாரதிய ஜனதாவின் தற்போதைய தலைவரும் குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருமான அமித்ஷா விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஐ.பி. அதிகாரி ராஜிந்தர் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் உள்துறை அமைச்சகமோ இஷ்ரத் வழக்கில் ராஜேந்தர் குமாருக்கு தொடர்பிருப்பதற்கான சாட்சியங்கள் இல்லை என்பதால் இதற்கான அனுமதியை வழங்க இன்று மறுத்துவிட்டது.