அப்சல் குருவை ஆதரிக்கும் ப.சிதம்பரம் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர் சந்தேகங்களுக்கு பதில் தருவாரா?
டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் தூக்கிலிடப்பட்ட குற்றவாளி அப்சல் குருவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் இஷ்ரத் ஜஹான் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சில சந்தேகங்களுக்கு விளக்கம்தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தொடர்பிருக்கிறதா என்பது சந்தேகம்; அப்படி தொடர்பிருந்தாலும்கூட அப்சல் குருவுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை கொடுத்திருக்கலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே குஜராத் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி இல்லை என மேல்மட்டத்தில் மாற்றிவிட்டதாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் கால உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை தெரிவித்த கருத்தும் சர்ச்சைக்குள்ளானது.
இவை நாடாளுமன்றத்திலும் பெரும் அமளியை ஏற்படுத்தின. இந்த நிலையில் குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதில்தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இஷ்ரத் ஜஹான் வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு முதலாவது பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் இஷ்ரத் ஜஹான், லஷ்கர் இ தொய்பாவின் ஸ்லீப்பர் செல் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒரு மாதம் கழித்து தாக்கல் செய்யப்பட்ட 2-வது பிரமாண பத்திரத்தில் இஷ்ரத் ஜஹானுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இஷ்ரத் ஜஹான் விவகாரத்தில் அப்போதைய மத்திய அரசு இப்படியான ஒரு இரட்டை நிலைப்பாட்டை ஏன் எடுத்தது? என்பதுதான் கேள்வி.
புலனாய்வுத்துறை அதிகாரிகளோ, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை கொலை செய்வதற்கான சதித் திட்டத்துடன் நுழைந்ததால் இஷ்ரத் ஜஹானை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல முடிவு செய்ததாக தெரிவித்தனர். ஆனால் மத்திய அரசோ, இஷ்ரத் ஜஹானுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரம் இல்லை என்கிறது. சில நாட்களுக்கு முன்னாள் உள்துறை செயலர் பிள்ளை, திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தயாரித்தது ப.சிதம்பரம்தான் என்று கூறியுள்ளார். எதற்காக ப.சிதம்பரம் அந்த பிரமாண பத்திரத்தை திருத்தம் செய்தார்?
தற்போது மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராகி இருக்கும் டேவிட் ஹெட்லியும் கூட இஷ்ரத் ஜஹானை ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என கூறியிருக்கிறார். இப்படி உளவுத்துறை அதிகாரிகள், அப்ரூவரான தீவிரவாதி என பலரும் இஷ்ரத் ஜஹானை தீவிரவாதி என்கிற போது அவருக்கும் தீவிரவாத இயக்கத்துக்குமான தொடர்புக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூற வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? என்ற கேள்விக்கு ப.சிதம்பரம் பதில் அளிப்பாரா?