இஷ்ரத் ஜஹான் வழக்கு- மோடியின் அமைச்சர்களுக்குள்ள தொடர்பு குறித்த சிடி மீது சிபிஐ விசாரணை?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி மும்பையை சேர்ந்த இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரும் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல வந்த தீவிரவாதிகள் என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என்ற புகார் எழுந்ததால் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இருப்பினும் இந்த வழக்கில் போலி என்கவுண்ட்டர் நடத்த உத்தரவிட்டவர் என கூறப்பட்ட மாநில முன்னாள் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக குஜராத்தின் மூத்த அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உரையாடல்கள் அடங்கிய சி.டி.யை சி.பி.ஐ. பெற்றுள்ளது என்றும் மோடியின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிரான விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சிபிஐ, புதியதாக எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை.. ஊடகங்கள்தான் அப்படியான செய்திகளை வெளியிட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.