போலி என்கவுண்டர் பற்றிய ஹெட்லியின் பரபரப்பு வாக்குமூலம்.. மோடி, அமித்ஷாவுக்கு நிம்மதி
டெல்லி: குஜராத்தில், இஷ்ரத் ஜகான் ரசா ஜகான் என்ற பெண் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அம்மாநில அப்போதைய முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி மீது இருந்த குற்றச்சாட்டுகளை களையும் விதமாக தீவிரவாதி ஹெட்லியின் வாக்குமூலம் அமைந்துள்ளது.
2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இஷ்ரத் மற்றும் 3 பேர் அகமதபாத் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த நான்கு பேரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், முதல்வராக பதவி வகித்த மோடியை கொலை செய்ய குஜராத்திற்குள் அவர்கள் ஊடுருவியதாகவும் காவல்துறை தெரிவித்தது.
ஆனால் இது போலியான என்கவுண்டர் என குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய முதல்வர் மோடி, உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா ஆகியோர் மீது போலி என்கவுண்டர் சம்பவத்தில் தொடர்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதுகுறித்து விசாரித்த அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் கோர்ட், என்கவுண்டரின் நம்பகத்தன்மையில் சந்தேகம் இல்லை என தீர்ப்பு வழங்கியது.
ஆனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், மேற்கொண்டு விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு கர்னைல் சிங் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த குழு வழங்கிய அறிக்கையில், இது போலி என்கவுண்டர் என குறிப்பிடப்பட்டிருந்தது. கொலையானவர்களுக்கு தீவிரவாதிகளோடு தொடர்பிருபதற்கு ஆதாரம் இல்லை என அந்த அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையை பரிசீலித்த குஜராத் ஹைகோர்ட், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 20 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தீவிரவாதியும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவருமான டேவிட் ஹெட்லி, மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்த வாக்குமூலத்தில், இஷ்ரத், தங்கள் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிதான் என கூறியுள்ளார்.
டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தால், குஜராத் போலீசார் கூறியதில் உண்மையிருக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. மோடி மற்றும் அமித்ஷா மீதான ஒரு பெரும் குற்றச்சாட்டை அமெரிக்க மண்ணில் இருந்து டேவிட் ஹெட்லி அகற்றியிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.