பஞ்சாப் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ- ஐபி
டெல்லி: பஞ்சாப் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் காவல் நிலையம் அருகே உள்ள காலி கட்டிடத்திற்குள் பதுங்கியுள்ளனர்.
அந்த கட்டிடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் பலியாகியுள்ளார்.
தீவிரவாதிகள் பாகிஸ்தானின் நாரோவல் பகுதியில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி செய்துள்ளதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.