அடுத்தடுத்து 6 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது... பாகிஸ்தானின் நாசவேலை திட்டம் அம்பலம்!!
டெல்லி: நாட்டின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு கடத்தியதாக கடந்த 2 வாரங்களில் மட்டும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் ராணுவ வீரர்கள் நடமாட்டம் உள்ளிட்ட ரகசிய விவரங்களை ஐ.எஸ்.ஐ.க்கு கடத்தியதாக உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டனர். டெல்லி போலீசார் எல்லைப் பாதுகாப்பு படையான பி.எஸ்.எப். வீரர் உள்ளிட்ட 2 பேரை நேற்று கைது செய்துள்ளது.
இந்த 6 பேரும் ஒருவருக்கொருவருடன் தொடர்புடையவர் இல்லை. இருப்பினும் இந்தியாவில் நாசவேலைகளை நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.க்கு ரகசியங்களை பணத்துக்காக கடத்தியுள்ளனர். இதில் பி.எஸ்.எப். வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பி.எஸ்.எப். கான்ஸ்டபிள்
பிடிபட்ட பி.எஸ்.எப்.ஐ சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள் அப்துல் ரஷீத், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு உடந்தையாக இருந்த மாஸ்டர் ராஜா என்ற கைஃபைதுல்லா கானும் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐ.எஸ்.ஐ. உளவாளியான கான், ராணுவ ரகசியங்களை ரஷீத் மூலமே பெற்று வந்திருக்கிறார்.
மீரட்டில் புகைப்படங்கள்
இதேபோல் மீரட்டில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் முகமது இஜாஸிடம் இருந்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்கு இஜாஸை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்த திட்டமிட்டிருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கொல்கத்தாவில் கள்ளநோட்டுகள்
கொல்கத்தாவில் இர்ஷாத் அன்சாரி, அவரது மகன் ஆஃபாக் அன்சாரி மற்றும் இவர்களது உறவினர் முகமது ஜஹாங்கீர் ஆகியோர் தெற்கு கொல்கத்தாவின் இக்பால்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட டாக்டர் சுதிர் போஸ் சாலை பகுதியில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ 7 லட்சம் கள்ள நோட்டுகளும் பிடிபட்டுள்ளன.
நாசவேலைக்கு சதி
இப்படி நாடு முழுவதும் ஐ.எஸ்.ஐ. தனது ஏஜெண்ட்டுகளையும் உளவாளிகளையும் களமிறக்கியிருப்பதன் மூலம் இந்தியாவில் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு சதித் திட்டத்துக்கு தயாராகி இருப்பது உறுதியாகி இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.