ஆந்திராவில் நாச வேலையில் ஈடுபடத் தயாராகும் லஷ்கர் தீவிரவாதிகள்... எச்சரிக்கும் ஐபி
ஹைதராபாத்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, இலங்கையில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை வைத்து ஆந்திராவில் பெரும் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. தற்போது இந்தத் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐயின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் ஐபி எச்சரித்துள்ளது.
குறிப்பாக விசாகப்பட்டனத்தில் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் ஐபி எச்சரித்துள்ளது. இதையடுத்து விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஊடுறுவி வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ஐபி கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது அரசின் உயர் அமைச்சர்கள், உயர் காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்ட அவர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் லஷ்கர் இ தொய்பா
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்தும் திட்டத்தை நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டது ஐஎஸ்ஐ. குறிப்பாக விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பின்னர் இந்தத் திட்டம் விறுவிறுப்படைந்தது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை இலங்கையை மையமாக வைத்து செயல்படுத்தி வருகிறது பாகிஸ்தான். இலங்கையில் உள்ள தனது தூதரகத்தையும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் திட்ட அலுவலகம் போல பயன்படுத்தி வருகிறது பாகிஸ்தான்.
தமிழகத்திற்குக் குறி
இது தொடர்பாக தமிழகத்தில் சிலர் கைது செய்ப்பட்ட போதுதான் பாகிஸ்தானின் இந்த பயங்கரத் திட்டம் குறித்துத் தெரிய வந்தது. இலங்கையிலிருந்து தீவிரவாதிகளை தென்னிந்தியாவுக்குள் ஊடுறுவ வைத்து நாச வேலையில் ஈடுபடுவதே ஐஎஸ்ஐயின் திட்டமாகும்.
பலிக்காத திட்டம்
இருப்பினும் இதுவரை எந்த திட்டமும் இங்கு பலிக்கவில்லை. ஆனால் தற்போத விசாகப்பட்டனத்தை இலங்கையில் உள்ள லஷ்கர் குழு குறி வைத்திருப்பதாக முக்கியத் தகவலை ஐபி வெளியிட்டுள்ளது. இதையடுத்து கிழக்குப் பிராந்திய கடலோரத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
மும்பை பாணியில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுறுவி விடாமல் தடுக்க தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் அபாயகரமான இடங்களில் கூடுதல் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தவிடுபொடியாக்கிய தமிழக போலீஸ்
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் முதலில் தமிழகத்தைத்தான் குறி வைத்தார்கள். ஆனால் தமிழக காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் உஷார் நிலை காரணமாக அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது. எனவே கவனத்தை ஆந்திரா பக்கம் திருப்பியிருப்பதாக தெரிகிறது.