ஐஎஸ்ஐஎஸ் ரேடியோவை கேக்குறீங்களா அல்லது 10 கசையடி வாங்கிக்கிறீங்களா?
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வானொலி நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறதாம். இந்த வானொலியை கேட்காதவர்களுக்கு பத்து கசையடி தரப்படுமாம்.
மக்கள் மத்தியில் தனது வானொலியை பிரபலமாக்க இப்படி கசையடி தண்டனையை அது அறிமுகம் செய்துள்ளதாம். இந்த வானொலியானது தற்போது ஐஎஸ்ஐஎஸ் வசம் உள்ள ஈராக், சிரியாவில் உள்ள பகுதிகளில் கேட்கிறதாம்.
தனி அரசாங்கத்தையே நடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ராணுவம் போன்ற படை பலத்துடன் தற்போது வானொலி உள்ளிட்டவற்றையும் நடத்தி வருகிறது.
முக்கிய அறிவிப்புகளை இந்த வானொலியில்தான் அது அறிவிக்கின்றதாம். எனவே இதை மக்கள் கண்டிப்பாக கேட்க வேண்டுமாம். அதில் பாடல்கள் எதுவும் வராது. பொழுதுபோக்கு அம்சங்களும் கிடையாது. வெறும் போதனைகளும், அறிவிப்புகளும் மட்டுமே இடம் பெறும்.
மேலும் இஸ்லாம் குறித்த பேச்சுக்கள், புகை பிடித்தல், ஹோமோ செக்ஸ் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்தும் அதில் போதிக்கப்படுமாம்.
ரேடியோ சேவை மூலமாக மக்களுக்குத் தேவையான திட்டங்கள் குறித்தும் அதில் அறிவிக்கிறார்களாம். ஏற்கனவே சோஷியல் மீடியாவையும் இது திறம்பட பயன்படுத்தி வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
இந்த ரேடியோவானது, ஈராக், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வசம் உள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் கேட்கிறது. இந்த ரேடியோவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் நகரங்களைக் கைப்பற்றுவது, அவர்களது வீரர்கள் குறித்த செய்தி உள்ளிட்டவையும் செய்தியாக சொல்லப்படுகிறது.
மேலும் வீரர்களின் பேட்டிகளையும் ஒலிபரப்புகின்றனர். சாதனைகள் குறித்தும் அதில் செய்தி வாசிக்கப்படுகிறது. மேலும் தங்களிடம் பிடிபட்ட வெளிநாட்டினர் உள்ளிட்டோரை தலையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுவது குறித்தும் இந்த ரேடியோவில் அறிவிக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தியாகும்.
சமூக அவலங்களை தவிர்க்கக் கோரும் நிகழ்ச்சிகளும் அதிக அளவில் இடம் பெறுகின்றன. இதற்காக மத போதகர்கள் வந்து பேசுகிறார்கள். மேலும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்றும் வானொலியில் எச்சரிக்கை விடப்படுகிறது.
இந்த ரேடியோவை கட்டாயம் அனைவரும் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் 10 கசையடியை தண்டனையைாக பெற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையால் டாக்சி டிரைவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனராம். ஐஎஸ்ஐஎஸ் ஏஜெண்டுகள் அடிக்கடி இந்த கார்களை சோதனையிட்டு ஐஎஸ்ஐஎஸ் வானொலி கேட்கிறதா என்பதை பரிசோதிப்பார்களாம். இல்லாவிட்டால் உடனடியாக தண்டனையாம். சம்பவ இடத்திலேயே கசையடி பெற வேண்டுமாம்.
அதேபோல புகை பிடிப்பதும் அங்கு குற்றமாகும். அதற்கும் கசையடி முதல் தலை துண்டிப்பு வரை தண்டனை தரப்படுகிறது. மேலும் சிகரெட் கடத்தி வருவதைத் தடுக்க புறாக்கள் பறப்பதற்கும் கூட தடை விதிக்கின்றனராம். காரணமம புறாக்களின் காலில் கட்டி சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தப்படுகிறதாம்.
சிகரெட்டை யாராவது வைத்திருந்தால் உடனடியாக தண்டணை தரப்படுமாம். பலர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டுள்ளனராம். இந்தத் தகவல்களை அங்கு போய் இந்தியா திரும்ப வந்துள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அரீப் மஜீத் விசாரணையாளர்களிடம் கூறியுள்ளார்.