ஏழை இந்திய இளைஞர்களை தீவிரவாத பாதைக்கு இழுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்
மும்பை: தமிழ்நாடு, கேரளம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏழை இளைஞர்களை குறிவைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தீவிரவாதப் பாதைக்கு இழுத்து செல்கின்றனர்.
இந்தியாவில் செயல்படும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு இதற்கு உதவி வருகிறது. குறிப்பாக வறுமையில் உள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்தும், குடும்பத்துக்கு அதிக பணம் அளிப்பதாக கூறியும் தீவிரவாதிகளாக மாற்றுகின்றனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதாகக் கூறி அந்நாடுகளில் அரசுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள்.
இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈராக்கில் தீவிரவாதிகளுடன் இணைந் துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதில் ஈடுபட்டுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர்.
இளைஞர்கள் தலைமறைவு
தமிழகம், காஷ்மீரில் இருந்து ஈராக் சென்ற சில இளைஞர்கள் அங்கு தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற புனிதப் போரில் ஈடுபடப்போவதாக குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். எனவே அந்த இளைஞர்களுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீவிரவாதிகள் அழைப்பு
தங்களுடன் இணையுமாறு இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இணைய தளத்தில் வீடியோவையும் வெளி யிட்டுள்ளனர்.
தமிழக இளைஞர்
தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான டி-சர்ட் அணிந்த நபர் அண்மையில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாளி இளைஞர் ஹாஜி பக்ரூதீன், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர சிரியா சென்றதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் அவர் கடலூரில் உள்ள தனது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ளவில்லை.
இந்தியாவில் தீவிரவாத அமைப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இந்தியாவில் பரவினால், அது நாட்டில் மோசமான தீவிரவாத செயல்களில் ஈடுபடும். எனவே இதனை தொடக்கத்திலேயே அழித்துவிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தீவிர விசாரணை
ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளிடமும் அவர்களது வெளிநாட்டு தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.