மாவோயிஸ்டுகளிடம் ஆயுதங்கள் வாங்கிய ஐஎஸ் தீவிரவாதிகள்... என்ஐஏ திடுக் தகவல்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களை வாங்கியிருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் கடந்த ஜனவரி மாதம் 16 ஐஎஸ் தீவிரவாதிகள் சிக்கினர். இவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது நஃபீஸ் கான், முகமது ஒபைதுல்லா கான், முகமது ஷரீப் மொகினுதீன் கான், அபு அனஸ் ஆகியோரும் அடங்குவர்.
அபு அனஸ் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது ஹைதராபாத், பெங்களூரு, தும்கூர், மும்பை, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது..
இந்த வழக்கில் தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் தங்களது தாக்குதல்களுக்கு பைப் வெடிகுண்டுகளை பயன்படுத்துவது வழக்கம். இத்தகைய பைப் வெடிகுண்டுகள் பிடிபட்ட ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.