ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய மேலும் 2 இந்தியர்கள் விடுவிப்பு
ஹைதராபாத்: லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் பிணைக்கைதியாக இருந்து மீண்ட இந்தியர்கள் இருவர் பத்திரமாக தாயகம் திரும்பிய நிலையில் எஞ்சிய இருவரையும் விடுவித்துள்ளனர் தீவிரவாதிகள்.
சிரியா, ஈராக் நாடுகளில் பல மாகாணங்களை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இங்கு கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் லிபியாவில் சிர்தே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்திய பேராசிரியர்கள் 4 பேர் அண்டை நாடான துனிஷியா சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடிவு செய்தனர்.
இதற்காக 4 பேரும் கடந்த 29 ஆம் தேதி ஒரு பேருந்தில் தலைநகர் திரிபோலி நோக்கி வந்தனர். அப்போது, ஒரு சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கி முனையில் அவர்களை கடத்திச் சென்றனர்.
அவர்களில் இரண்டு பேரை மட்டும் முதலில் விடுவித்தனர். இந்நிலையில் எஞ்சிய இரண்டு பேரையும் இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் விடுவித்தனர். தவறாக கடத்திச் சென்றதே விடுவிப்புக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.