டெல்லியை விட தமிழகத்துக்குத்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் முதல் 'குறி'யாம்..... உளவுத்துறை 'பகீர்' தகவல்!
டெல்லி: உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் டெல்லியை விட தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்தான் முதல் தாக்குதலை நடத்தக் கூடும் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக், சிரியாவில் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை அமைத்திருப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரகடனம் செய்துள்ளனர். அத்துடன் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை மிகவும் கொடூரமான கொலையில் படுகொலை செய்து வருகின்றனர்.
இந்த பயங்கரவாத கும்பலின் அடுத்த இலக்கு தென்னாசியாதான்.. அதுவும் குறிப்பாக ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றுவதில்தான் குறியாக இருக்கிறார்களாம். அப்படி ஆப்கானிஸ்தானில் வேரூன்றி விட்டால் அதன் பின்னர் இந்தியா மீது தாக்குதல்களை நடத்தலாம் என்பது ஐ.எஸ். தீவிரவாதிகளின் திட்டம் என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.
முதலில் ஆப்கானிஸ்தான்..
அப்படி இந்தியாவுக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் கால் பதிப்பது என்பது தங்களுக்கு ஆதரவாளர்கள் உள்ள ஜம்மு காஷ்மீரிலோ அல்லது தென்னிந்தியாவிலோதான் இருக்கக் கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாதுகாப்பு விவகாரங்களில் ஆய்வாளரான ஷிஷிர் குப்தா கூறுகையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்காக டெல்லியோ ராஜஸ்தானோ இப்போது இல்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானில் கால் பதித்த பின்னரே இந்தியாவில் தாக்குதல் நடத்தக் கூடும்.. அதுவும் தென்னிந்தியாவில்தான் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்கிறார்.
தனிநபர் தாக்குதல்..
ஐ.எஸ். இயக்கத்தின் பெயரில் தனிநபர் கூட தாக்குதல் நடத்தலாம்; அல்லது ஒரு தலைமையின் கீழ் ஐ.எஸ். இயக்கத்தினர் கூட்டு தாக்குதலையும் நடத்தக் கூடும் என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.
தமிழகம்..
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழகத்தைச் சேர்ந்த ஹாஜா என்பவர்தான் முதன் முதலாக ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தவராக கூறப்பட்டது. அதேபோல் தமிழக இளைஞர்கள்தான் முதன் முதலாக ஐ.எஸ். இயக்கத்துக்கான ஆதரவைத் தெரிவிக்கும் டி சர்ட்டுகளையும் அணிந்தவர்கள்.
தெலுங்கானா, கேரளா
இதனைத் தொடர்ந்தே தெலுங்கானாவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயற்சித்து சல்மான் முகைதீன் மற்றும் நிக்கி ஜோசப் பிடிபட்ட விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.. அண்மையில் கூட ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயற்சித்ததாக எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அனைவருமே கேரளா மாநிலத்தவர்தான்.
முதல் இலக்கு தென்னிந்தியா
ஆகையால்தான் ஐ.எஸ். இயக்கத்தின் பெயரில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டதால் அதன் முதல் இலக்காக தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவாகத்தான் இருக்கும் எனவும் சுட்டிக் காட்டுகிறது உளவுத்துறை.