அரசு வெப்சைட்டுகளை ஹேக் செய்ய இந்தியர்களுக்கு ரூ.40 லட்சம் அளிக்க ஐஎஸ் ரெடி
டெல்லி: அரசு இணையதளங்களை ஹேக் செய்து முக்கிய தகவல்களை தங்களுக்கு அளித்தால் ரூ.40 லட்சம் வரை அளிக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தயாராக இருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அரசின் இணையதளங்களை ஹேக் செய்து முக்கிய தகவல்களை அளிக்கும் ஹேக்கர்களுக்கு ரூ. 40 லட்சம் வரை அளிக்க ஐஎஸ்ஐஎஸ் தயாராக உள்ளதாம். ஒவ்வொரு அரசு தகவலுக்கும் ரூ.40 லட்சம் அளிக்க தயாராக உள்ளது ஐஎஸ்ஐஎஸ்.
அரசு இணையதளங்களை ஹேக் செய்வது குறித்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் மூலம் தீவிரவாதிகள் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்களை தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.
இது குறித்து சைபர் குற்றப்பிரிவு நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறியிருப்பதாவது,
ஹேக்கர்கள் ஆன்லைனில் தொடர்பில் உள்ளனர். அரசு தகவல்களை திருட ஹேக்கர்களுக்கு தீவிரவாதிகள் பெரிய தொகையை அளிக்க தயாராக உள்ளனர். இந்தியாவுக்குள் நுழைய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஹேக்கர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அளிக்க தயாராக உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக செயல்பட அரசு தகவல்களை திருடுவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் திட்டங்களில் ஒன்று. இந்தியாவில் உள்ள சுமார் 30 ஆயிரம் சாப்ட்வேர் என்ஜினியர்களை ஐஎஸ்ஐஎஸ் இதுவரை தொடர்பு கொண்டுள்ளது. அதில் பலர் அரசு தகவல்களை அளிக்க ஒப்புக் கொண்டிருக்கலாம் என்றார்.