ரம்ஜான் கொண்டாட வழிவிட்டு.. கூர்க்காலாந்து போராட்டம் 12 மணி நேரம் ஒத்திவைப்பு
டார்ஜிலிங் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட வழிவிட்டு, கூர்க்காலாந்து கேட்டு நடத்தப்படும் போராட்டத்தை 12 மணி நேரம் ஒத்திவைத்துள்ளது போராட்டக்குழு. டார்ஜிலிங் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட
டார்ஜிலிங்: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக 12 மணி நேரத்துக்குப் போராட்டத்தை ஒத்திவைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூர்க்காலாந்து போராட்டக்குழு.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மலைப்பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்காக திங்கள் கிழமை ஒருநாள் மட்டும் 12 மணி நேரம் போராட்டத்தை ஒத்தி வைக்க கூர்க்காலாந்து போராட்டக் குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.
டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை தனி மாநிலமாக, கூர்க்காலாந்து என்று அறிவிக்க வேண்டும் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால், கடந்த 10 நாட்களாக அவர்கள் நடத்தி வரும் போராட்டத்தினால் டார்ஜிலிங் மலைப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மருந்துக்கடைகளை தவிர அனைத்துக் கடைகளும், உணவகங்களும், தங்கும் விடுதிகளும் கடந்த 10 நாட்களாகவே மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையொட்டி இன்று ஒருநாள் மட்டும் இஸ்லாமியர்கள் காலை 6 மணி முதல் இஸ்லாமியர்கள் வாகனங்களில் வெளியே செல்ல அனுமதிக்கலாம் என போராட்டக்குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.