குழந்தைகள் கழுத்தில் விலை பட்டியல் தொங்கவிட்டு விற்கும் ஐஎஸ்ஐஎஸ்- ஐநா அதிகாரி திடுக் தகவல்
பெங்களூரு: குழந்தைகளை கடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதாகவும், உயிரோடு புதைப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின், குழந்தைகள் நல கமிட்டி குற்றம்சாட்டியுள்ளது.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் நடத்திவரும் தாக்குதல்களை ஆய்வு செய்த ஐநா குழந்தைகள் நல கமிட்டி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
மனித வெடிகுண்டு
18 வயதுக்குட்பட்ட ஈராக் சிறுவர்களை தற்கொலை படை தாக்குதல்களுக்காகவும், கேடயமாகவும், வெடிகுண்டுகள் தயாரிப்புக்காகவும், ஐஎஸ்ஐஎஸ் பயன்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை
சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் கொடுமையான முறையில் கொல்லப்படுகின்றனர். கமிட்டியின் உறுப்பினர் ரெனேட் வின்டர் கூறுகையில் "இங்கு நடக்கும் பிரச்சினை உண்மையில் மிக பெரிதாக உள்ளது. கிறிஸ்தவர்கள், யாசிதிகள் மட்டுமின்றி, சன்னி பிரிவு முஸ்லிம் குழந்தைகளையும் தீவிரவாதிகள் கொடூரமாக கொல்கின்றனர்.
ஆயுத பயிற்சி
குழந்தைகளுக்கே தெரியாமல் அவர்களை தற்கொலை படை தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதாக எங்கலுக்கு தகவல் கிடைத்துள்ளது. 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை கூட ஆயுதம் தாங்க பயிற்சி கொடுக்கும் அவலமும் அங்கு நடக்கிறது.
மார்க்கெட்டுகளில் விற்பனை
சிறுபான்மை மதங்களை சேர்ந்த சிறுவர், சிறுமிகளை கடத்தி வரும் தீவிரவாதிகள், மார்கெட்டுகளில் நிற்க வைத்து அவர்கள் கழுத்தில், விலையை எழுதி தொடங்கவிடுகின்றனர். விலை கொடுத்து வாங்கிச் செல்வோர் செக்ஸ் அடிமைகளாக சிறார்களை நடத்துகின்றனர். குழந்தைகளை உயிரோடு புதைத்து கொலை செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. ஈராக் அரசு இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறது என்பதே கேள்வி" என்றார் ரெனேட் வின்டர்.