தீவிரவாதியாக மாறவிருந்த சிறுமியின் மனதை மாற்றிய புனே போலீஸ் அதிகாரிக்கு ஐஎஸ் கொலை மிரட்டல்
புனே: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரவிருந்த சிறுமியின் மனதை மாற்றிய புனேவைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு குழு அதிகாரிக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து அவர் அல் ஜெசீரா தொலைக்காட்சி சேனலை தினமும் பார்த்து வந்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 200 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இன்டர்நெட் மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.
அந்த தீவிரவாத இயக்கத்திற்காக எதையும் செய்யத் தயாராகியுள்ளார். ஜீன்ஸ் அணிவதை நிறுத்திவிட்டு புர்கா அணிந்துள்ளார். சிரியாவுக்கு வந்து மருத்துவப் படிப்பு படிக்குமாறு அவருக்கு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் அவரை கண்காணித்து வந்துள்ளனர். அவர் சிரியா கிளம்புவதற்கு முன்பு அவரை அழைத்து விசாரணை நடத்தி, அறிவுரை வழங்கி அவரின் மனதை மாற்றிவிட்டனர்.
அந்த மாணவியிடம் பேசி அவரின் மனதை மாற்றியதற்காக தீவிரவாத தடுப்பு குழு அதிகாரி பானுபிரதாப் பார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார்.