முன்னாள் இஸ்ரோ தலைவர் யு.ஆர். ராவ் காலமானார்
இஸ்ரோ முன்னாள் தலைவர் யுஆர்.ராவ் பெங்களூருரில் இன்று காலமானார். அவருக்கு வயது 85
பெங்களூரு: இஸ்ரோ முன்னாள் தலைவரும், உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் யுஆர். ராவ் பெங்களூருரில் இன்று காலமானார். அவருக்கு வயது 85.
கர்நாடக மாநிலத்தின் அடமாரு என்ற கிராமத்தில் 1932 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பிறந்தவர் உடுப்பி ராமச்சந்திர ராவ். பள்ளி, கல்லூரி நாட்களில் ஏராளமான நூல் களைப் படித்து, தன்னை மேம்படுத்திக் கொண்டார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அகமதாபாத் இயற்பியல் ஆய்வுக்கூடத் தில் 1961-ல் முனைவர் பட்டம் பெற்றார். டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலில், காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆராய்ந்தார்.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் உயர் ஆராய்ச்சி மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றினார். காஸ்மிக் கதிர்களில் உள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் குறித்து ஆராய்ந்தார். செயற்கைக்கோள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பொறுப்பை 1972-ல் ஏற்றார்.
இவரது வழிகாட்டுதலில், 1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா மற்றும் அடுத்தடுத்து
பல செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
பெங்களூரு வில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக்கோள் மைய இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1984 முதல் 1994 வரை இஸ்ரோ தலைவராக செயல்பட்டார்.
கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ் விருது, சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது, மேகநாத் சாகா பதக்கம், ஜாகிர் உசேன் நினைவு விருது, ஆர்யபட்டா விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 1976-ல் பத்மபூஷண் விருது பெற்றார். இந்த ஆண்டு அவருக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கியது.
இந்நிலையில் உடுப்பி ராமச்சந்திர ராவ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.