பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் கவுன்ட்டவுன் தொடக்கம்..30 செயற்கைகோள்களுடன் நாளை காலை விண்ணில் பாய்கிறது!
கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டா: கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 28 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருவதால் இந்திய செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களும் அனுப்பப்படுகிறது.
அந்தவகையில் கார்ட்டோசாட்-2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் ஆக மொத்தம் 243 கிலோ எடை கொண்ட 30 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இறுதி கட்ட பணியான 28 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 9.29 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
'கவுண்ட்டவுன்' தொடங்கியுள்ள நிலையில் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.