கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்!
கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா: கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தொடக்கம் முதலே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று, இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து கார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருவதால் இந்திய செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களும் அனுப்பப்படுகிறது.
அந்தவகையில் கார்ட்டோசாட்-2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் ஆக மொத்தம் 30 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் பாய்ந்த ராக்கெட்
இறுதி கட்ட பணியான 28 மணி நேர ‘கவுன்ட்டவுன்' நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று காலை 9.29 மணிக்கு பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆயுட்காலம் 5 ஆண்டுகள்
அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது
இந்த கார்டோசாட் 2இ செயற்கைக்கோள் 712 கிலோ எடை கொண்டது ஆகும். பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ரூ.160 கோடி செலவில்..
பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த செயற்கைகோள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.160 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.