இஸ்ரோ ஏவிய 20 சாட்டிலைட்களில் 17 வெளிநாடு.. 3 இந்தியா.. அதில் ஒன்று நம்மூரு!
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, குறைந்த செலவில் 20 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி புதிய சாதனையை இன்று படைத்துள்ளது.
இந்த 20 செயற்கைக்கோள்களில் 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் ஆகும். மீதமுள்ள மூன்றில் ஒன்று இஸ்ரோவின் கார்டோசாட் -2 ஒன்று ஆகும்.
இது தவிர சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 1.5 கிலோ எடை கொண்ட ‘சத்தியபாமா சாட்' என்ற செயற்கைக்கோளும், புனே என்ஜினீயரிங் கல்லூரியின் ‘ஸ்லயம்' என்ற ஒரு கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளும் இன்று பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, இலக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள்கள் ஆகும்.
இவற்றில் சத்தியபாமா சாட், ஆறு மாத காலங்கள் மட்டும் செயற்கைக்கோளாகச் செயல்படும். பின்னர் அது சிறியநிலை ரேடியோ தொலைத்தொடர்புகளுக்காகப் பயன்படுத்தப்படும். ராக்கெட்டில் இது இஸ்ரோவின் கார்டோசாட்டிற்கு அடுத்த இடத்தில் பயணம் செய்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு இந்தத் திட்டமானது அப்போதைய மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து அங்கு பயின்ற மாணவர்கள் மூலம் இந்த சத்தியபாமா சாட் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான செலவுகளை அந்த பல்கலைக்கழகமே ஏற்றுக் கொண்டது.
இந்த செயற்கைக்கோளானது கிரீன்ஹவுஸ் எனப்படும் பச்சைவீட்டு வாயுக்கள் குறித்தும், அதன்மூலம் இந்தியாவின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்தும் ஆராய இருக்கிறது.
தினமும் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தும் 10 முதல் 15 நிமிடங்கள் இந்த செயற்கைக்கோளானது தொடர்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.