இந்தாண்டின் முதல் வெற்றி... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்
சென்னை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 'மைக்ரோசாட்-ஆர்', 'கலாம் சாட்' ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக புவிவட்டார பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ (DRDO) பயன்பாட்டிற்காக 690 கிலோ எடைகொண்ட மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோள் நள்ளிரவு 11.37 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
46-வது ராக்கெட்
34 கிராம் எடையில் 'கலாம்சாட்' என்ற மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இதற்கான 28 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று முன்தினம் 7.37 மணிக்குத் தொடங்கியது. பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்ட 4 நிலைகளை கொண்டது. கடைசி நிலையில் திரவ எரிபொருளில் இயங்கும் 2 ராக்கெட் மோட்டார்களின் தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளன. இந்த திரவ எரிபொருள்களின் மொத்த எடை 2.5 டன் ஆகும்.
வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 20 நிமிடத்தில் புவிவட்டார பாதையில் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதுவரையில் ராக்கெட்டுகளின் 4-வது நிலையில் செயற்கை கோள்கள் பொருத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான ‘கலாம் சாட்' செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது
இந்தாண்டின் முதல் வெற்றி
இந்தாண்டின் முதல் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு செயற்கை கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூமியில் இருந்து 274.12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்' செயற்கை கோளும், 450 கிலோ மீட்டர் தூரத்தில் ‘கலாம் சாட்' செயற்கை கோளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ‘மைக்ரோசாட்-ஆர்' செயற்கை கோள் பூமியை கண்காணிக்கவும், ‘கலாம் சாட்' செயற்கை கோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.
நடப்பாண்டில் சந்திரயான்-2
கடந்த 25 ஆண்டுகளில், இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் 53 இந்திய செயற்கை கோள்களும் மற்றும் 269 வெளிநாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் மூலமாக இரு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டானது இஸ்ரோ நிறுவனத்தின் பி.எஸ்.எல்.வி. ரகத்தின் 46-வது ராக்கெட் ஆகும். நடப்பாண்டில் சந்திரயான்-2 உள்பட 32 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.