"நமஸ்தே நாசா".. நாசாவுடன் இணையும் இஸ்ரோ... நிலநடுக்க ஆய்வு சாட்டிலைட் ஏவத் திட்டம்!
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சி செய்ய நவீன செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளன.
விண்வெளி ஆராய்ச்சிகளைப் போலவே, பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறியவும் உலக நாடுகள் ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன.
சமயங்களில் சுனாமி எச்சரிக்கைக்கூட விடுக்கப்படுகிறது. ஆனால், நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் வகையிலான தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
நிலநடுக்க ஆய்வு...
எனவே, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவது தொடர்பான ஆராய்ச்சிகளை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தி வருகின்றன. தற்போது அதன் அடுத்தகட்டமாக இது தொடர்பாக ஆய்வு செய்ய நவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இருநாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.
ஆலோசனைக் கூட்டம்...
இது குறித்து நேற்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் இந்த அறிவிப்பை நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூட்டாக அறிவித்தனர்.
புதிய செயற்கைக்கோள்...
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் கூறுகையில், "நாசா-இஸ்ரோ கூட்டுத் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய செயற்கைக்கோளானது, பூமியின் சில சிக்கலான செயல்பாடுகளைக் கண்டறிய உதவும்.
2021ல்...
குறிப்பாக, பருவநிலை மாறுபாடு, பனிப் படலங்கள் சரிவு, சுனாமி, நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம் போன்ற பேரிடர்கள் குறித்து ஆய்வு செய்யும். வரும் 2021-ஆம் ஆண்டுவாக்கில் இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.
நிசார்...
இந்த செயற்கைக் கோளுக்கு நிசார் (NISAR) என்று பெயரிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மங்கள்யான்...
செவ்வாய் கிரகத்துக்கு மிகக் குறைந்த செலவில் மங்கள்யானை இந்தியா அனுப்பியபோதே, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையுடன் நாசா இணைய விருப்பம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.