விண்வெளி வீரர்களுக்கான ‘குகை’ வீடுகள்... நிலவில் கட்டுகிறது இஸ்ரோ!
நிலவில் மனிதர்கள் தங்கி ஆய்வு நடத்த குகை போன்ற வீடுகளை இஸ்ரோ உருவாக்குகிறது.
டெல்லி: எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக, குகை போன்ற அமைப்பை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
விண்வெளி ஆய்வில் உலகநாடுகளுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. விண்வெளி தொடர்பான ஹாலிவுட் படங்கள் தயாரிப்பிற்கு ஆகும் செலவைவிட குறைந்த செலவில் செயற்கைக்கோள்களைத் தயாரித்து, அவற்றை விண்ணில் ஏவி மற்ற நாடுகளைத் தொடர்ந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், நிலவிற்கு மனிதர்களை அனுப்பி எதிர்காலத்தில் தனது ஆய்வுகளை மேலும் விரிவு படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒருகட்டமாக அங்கு மனிதர்கள் தங்கி ஆய்வு மேற்கொள்வதற்கு ஏதுவாக பனிக்குகை போன்ற இருப்பிட வசதியை உருவாக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
3 டி பிரிண்டர்கள் போன்ற கருவிகளையும், ரோபோக்களையும் பயன்படுத்தி இந்த இருப்பிடங்களை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் 5 மாதிரிகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
நிலாவோட மண்ணை எடுத்து
நிலவில் உள்ள மண்ணுடன் மேலும் சில வேதியியல் பொருட்களைக் கலந்து இந்த இருப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான முதல்கட்ட ஆய்வுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
குகை ஆய்வுத்தளம்
நிலவில் அமைக்கப்படும் குகை ஆய்வுத்தளமாகப் பயன்படுத்தப்படும் எனக் கூறும் இஸ்ரோ, இனிவரும் காலங்களில் இதேபோன்ற குடியிருப்பு அமைப்புகளை உருவாக்க அமெரிக்கா போன்ற நாடுகள் விருப்பப்பட்டால், அவற்றிற்கு தங்களால் ஆன பங்களிப்பை இஸ்ரோ நிச்சயம் அளிக்கும் என்றும் உறுதியாகக் கூறுகிறது.
குகையில் தங்கலாம்
அதோடு, எதிர்காலத்தில் செயற்கைக்கோள் மூலம் நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் கூடுதல் நேரம் அங்கு தங்கி ஆய்வு மேற்கொள்ள முடியும் இந்த குகை இருப்பிடங்கள் உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
இக்ளூ வீடு
இதற்காக பாதுகாப்பான பொருட்களைக் கொண்டு இந்த பனிக்குகை போன்ற வீட்டை உருவாக்க அவர்கள் பாடுபட்டு வருகின்றனர். வெற்றி பெற வாழ்த்துவோம் பாஸ்!