கேரளாவிலிருந்து மோடிக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார் நடிகர் இன்னசென்ட்
திருவனந்தபுரம்: மோடி அரசுக்கு பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாக கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் வெற்றி பெற்ற சுயேச்சை எம்.பி.யான நடிகர் இன்னசென்ட் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில், மூன்று தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். அதில் சாலக்குடி தொகுதியில் வென்ற நடிகர் இன்னசென்டும் ஒருவர். சுயேச்சைகள் மூவருக்குமே கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்து வேட்பாளர்களை நிறுத்தாமல் இருந்தது. இந்நிலையில் கம்யூனிஸ்டுகளுக்கு கட்டுப்படாமல் சுயேச்சையாக செயல்பட விரும்புவதாக கூறியுள்ள இன்னசென்ட், மோடிக்கு பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பாஜகவுக்கோ அல்லது அதன் கூட்டணி கட்சிக்கோ ஒரு எம்.பி சீட்டும் கிடைக்காத பெரிய மாநிலம் கேரளா மட்டுமே. காங்கிரசும், கம்யூனிஸ்டுமாக அனைத்து எம்பிக்களும் மோடிக்கு எதிரணியில் இருப்பவர்கள்தான். இந்நிலையில் இன்னசென்ட் பேச்சு முக்கியத்துவம் பெருகிறது.
திருச்சூரில் நிருபர்களிடம் இன்னசென்ட் மேலும் கூறுகையில், நாடாளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நான்தான் சுயமாக முடிவெடுப்பேன். எனது நடவடிக்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதாக இருப்பதாக அவர்கள் கருதினாலும் அதில் புரிதலை ஏற்படுத்துவேன். நரேந்திரமோடி ஆட்சியில் மத மோதல்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. மோடி இனிமேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தான் அவரது குணநலனை கணக்கிடும் அளவீடாக இருக்கும். அவரது ஆட்சியில் நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்து வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்திய வலிமையான நாடாக உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.