கர்நாடக அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை.. காங்கிரஸ் விடாப்பிடி... குமாரசாமி புலம்பல்
கர்நாடக முதல்வராக பெறுப்பேற்று இருக்கும் குமாரசாமி, அமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் கட்சியுடன் பிரச்சனை இருப்பதாகவும், விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பெங்களூர்: கர்நாடக முதல்வராக பெறுப்பேற்று இருக்கும் குமாரசாமி, அமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் கட்சியுடன் பிரச்சனை இருப்பதாகவும், விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் அடுத்த ஐந்து வருடத்திற்கும் முதல்வராக இருப்பது சந்தேகம்தான் என்று ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். தற்போது அதையே குமாரசாமியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் சில முக்கியமான நபர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. இதனால் சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்.அதேபோல் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நபரான, டிகே சிவக்குமார் துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கிறார். அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை.
இதனால் கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கூட்டணி குழப்பம் விரைவில் சரியாகும் என்றும் கூறியுள்ளார். விரைவில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பின் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும் என்றுள்ளார்.
இதுவரை நடந்த பேச்சு வார்த்தையின் படி காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 22 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மஜத கட்சிக்கு 12 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது.