மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவேன் - மோடி அறிவிப்பு
டெல்லி: மாநிலங்களின் வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி அடங்கியுள்ளது. எனவே அனைத்து மாநில கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போதுதான் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மோடி கூறுகையில், நாட்டின் பெடரல் அமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம். மாநிலங்கள் எழுப்பும் பிரச்சினைகள், அவர்களின் கோரிக்கைகளை எனது அலுவலகம் மிகுந்த கவனத்துடன், முக்கியத்துவம் கொடுத்து அணுக வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் அலுவலகம் என்பது முக்கியமான நிறுவனம் போல மாறியுள்ளது. அதன் சிறந்த நடைமுறைகள் தொடர வேண்டும்.
மக்களின் குறைகளை அதி வேகத்தில் தீர்க்க வேண்டும். அதற்கு பிரதமர் அலுவலகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மக்கள் பிரதநிதிகள் எழுப்பும் பிரச்சினைகளை, அது தனிப்பட்ட மனுக்களாக இருநதாலும் சரி, நாடாளுமன்றம் மூலமாக எழுப்பினாலும் சரி அவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
அனைவரும் குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலம் நல்லாட்சியைத் தர முடியும். அதிகாரிகள் அனைவரும் தங்களது யோசனைகள், கருத்துக்களை என்னிடம் தாராளமாக, சுதந்திரமாக தரலாம். அப்படிப்பட்ட அதிகாரிகளை நான் வரவேற்கிறேன் என்றார் பிரதமர்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது அலுவலக அதிகாரிகளை முதல் முறையாக மோடி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.