24 மணி நேரத்தில் வேலைய விட்டு போய்டுங்க.. 'ஹெச்.ஆர்' மிரட்டல் ஆடியோவை வெளியிட்ட ஐடி ஊழியர்!
ஐடி ஊழியர் ஒருவரை அடுத்த நாள் காலையே வேலையை விட்டு செல்லுமாறு அந்த நிறுவனத்தின் எச்.ஆர் அதிகாரி ஊழியரிடம் தொலைபேசியில் பேசியதாக வெளியான உரையாடல் வைரலாக பரவி வருகிறது.
பெங்களூரு: பிரபல ஐடி நிறுவன ஊழியரை அடுத்த நாளே பணியை விட்டு செல்லுமாறு எச்.ஆர் அதிகாரி கூறும் ஆடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் ஐடி துறையில் அதிக அளவில் பணியிழப்புகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டு வந்தன. மென்பொருள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டும் ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. ஆனால் மொத்தமான பணியிழப்புகள் இருக்காது என்று ஐடி நிறுவனங்கள் மறுத்து வந்தன.
இந்நிலையில் பெங்களூருவிலுள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் அடுத்த நாள் காலையே வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லுமாறு எச்.ஆர் என்று சொல்லப்படும் நிறுவனத்தில் ஆட்களை சேர்க்கும் பணியை மேற்கொண்டு வரும் மனிதவளத் துறையின் அதிகாரி ஒருவர் ஊழியரிடம் பேசும் ஆடியோ லீக் செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் ராஜினாமா
சுமார் 6.45 நிமிடங்கள் நடக்கும் அந்த உரையாடலில் எச்.ஆர் பெண் அதிகாரி, நிர்வாகம் செலவுகளை குறைக்கும் நடவடிக்கை காரணமாக சிலரை பணியிழப்பு செய்ய முடிவு செய்துள்ளது. அதில் உங்களது பெயரும் இடம்பெற்றுள்ளதால் நாளை காலை 10 மணிக்கே ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு நல்ல முறையில் பணியை விட்டு செல்லுங்கள் என்று கூறுகிறார்.
மிரட்டல்
அதற்கு கெஞ்சாத குறையாக பதிலளிக்கும் ஊழியர் 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்து பணியை விட்டு அனுப்புவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று கூறுகிறார். எது எப்படியானாலும் பணியிழப்பு உறுதி என்பதால் நீங்களே ராஜினாமா செய்து விட்டு சென்றால் நல்லது, இல்லாவிடில் உங்களை பணிநீக்கம் செய்ய நேரிடும் என்றும் பெண் அதிகாரி எச்சரிக்கை விடுக்கிறார்.
ரூல்ஸ் பேசிய அதிகாரி
ஆனாலும் குறுகிய காலத்தில் இந்த அதிர்ச்சியை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், மறுபரிசீலனை செய்யும்படியும் ஊழியர் மீண்டும் கெஞ்சுகிறார். அதற்கு எச்.ஆர் அதிகாரி, நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணியிழப்பு செய்ய நேரிடும் என்ற விதியை ஒப்புகொண்டுள்ளதால், தன்னால் எதுவும் செய்ய முடியாது இது நிர்வாகத்தின் முடிவு என்று கராராக பேசுகிறார் அதிகாரி.
இரண்டாவது ஆதாரம்
தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்து இது முதல் முறையாக வெளிவரும் ஆதாரமல்ல. ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு டிசிஎஸ் ஊழியர்களை வெளியேற்றுவதற்காக நடத்திய நேர்காணல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விப்ரோ 700 ஊழியர்களையும், காக்னிசன்ட் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஊழியர்களையும், இன்போசிஸ் சுமார் 9 ஆயிரம் ஊழியர்களையும் பணிநீக்க திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
அச்சத்தில் ஊழியர்கள்
இந்நிலையில் ஐடி நிறுவனங்களின் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கண்டித்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஒன்று திரண்டு போராடத் தயாராகி வருகின்றனர். இதனிடையே ஐடி ஊழியர் ஒருவரை, நிறுவனம் அடுத்த நாளே பணியை ராஜினாமா செய்து விட்டு செல்லுமாறு கூறும் அடாவடி ஆடியோ ஊழியர்களின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.