தயவு செஞ்சு பைக், காரை வெளியே எடுக்காதீங்க.. தமிழ் ஐடி ஊழியர்களுக்கு நிறுவனங்கள் உத்தரவு
பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்களை வைத்திருந்தால் அதை எந்தக் காரணம் கொண்டும் வெளியே இயக்க வேண்டாம் என்று ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளன.
பெங்களூரில் கன்னடப் போராட்டக்காரர்கள் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களைக் குறி வைத்து தாக்குவதும், எரிப்பதுமாக உள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் ஊழியர்கள் அவற்றை அலுவலகத்திலேயே விட்டுச் செல்லுமாறும், வேறு வாகனங்களில் அல்லது பொதுப் போக்குவரத்து மூலம் தங்களது வீடுகள், இருப்பிடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தக் காரணம் கொண்டும் வாகனங்களை பெங்களூர் சாலைகளில் ஓட்ட வேண்டாம் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பெரும்பாலான ஐடி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து ஊழியர்கள் வன்முறை பீதி காரணமாக வீடுகளுக்குக் கிளம்பியதால் எம்.ஜி.ரோடு, ஓசூர் சாலை உள்பட அனைத்து முக்கிய சாலைகளிலும் மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பிரிகேட் சாலை அருகே உள்ள அமேசான் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது ஊழியர்களை உள்ளேயே வைத்து வெளியே கேட்டைப் பூட்டியது. அனைத்து ஊழியர்களும் மூடப்ட்ட கேட்டுக்குள்ளேய முடங்கும் நிலை ஏற்பட்டது.