இந்தியாவில் பெண்களுக்கு மரியாதை இல்லை, இங்கு வாழ்வதே கடினம்.. சானியா மிர்ஸா
டெல்லி: இந்தியாவில் பெண்களுக்கு, குறிப்பாக விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுத்தமாக மதிப்பு இல்லை. இந்த நிலை மாற வேண்டும். இல்லாவிட்டால் விளையாட்டுத்துறைக்கு பெருமளவில் பெண்கள் வருவது நின்று போய் விடும். ஒட்டுமொத்த சமூகப் பார்வையும், கலாச்சாரமும் மாற வேண்டியது அவசியம் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கூறியுள்ளார்.
ஐ.நா.வின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பெண்களின் தூதராக சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியின்போது பேசியபோதுதான் இவ்வாறு ஆதங்கம் வெளியிட்டார் சானியா மிர்ஸா.
சானியா மிர்ஸாவாக இருப்பது கஷ்டம்:
சானியா பேசுகையில்," இந்த நாட்டில் சானியா மிர்ஸாவாக இருப்பது கடினமானது. இங்கு பாலின பாகுபாடு பார்க்கப்படுகிறது. இதை மாற்றியாக வேண்டும்.
நான் சந்திக்காத சர்ச்சை இல்லை:
நான் சந்திக்காத சர்ச்சை இல்லை. அனைத்து வகையான சர்ச்சைகளையும் பார்த்து விட்டேன். காரணம், நான் ஒரு பெண் என்பதால். இதுவே நான் ஆணாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு சர்ச்சைகளைச் சந்தித்திருக்க மாட்டேன்.
கலாச்சாரம் மாற வேண்டும்:
தற்போது இந்தியாவில் நிலவும் பெண்களுக்கு எதிரான போக்கு, கலாச்சாரம் மாற வேண்டும். இல்லாவிட்டால் நிறையப் பெண்கள் விளையாட்டுத் துறைக்கு வருவதற்குத் தயங்குவார்கள்.
அரசு செயல்படுகிறது:
விளையாட்டுத் துறையில் பாலின பாகுபாடு அதிகம் இருப்பதை அரசும் உணர்ந்திருக்கிறது. அதை மாற்றும் வகையில் செயல்படுகிறது. தற்போதைய விளையாட்டு அமைச்சர் சர்பானந்தா சோனோவால், பெண்கள் விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதை ஆதரித்துப் பேசுகிறார், செயல்படுகிறார். இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
அரசின் செயல்பாடு மகிழ்ச்சி தருகிறது:
பெண்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு எதிராக அரசு செயல்பட்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. அதுகுறித்து அரசுத் தரப்பில் பேசுகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக மாற வேண்டும்:
பெண்களுக்கு எதிரான பார்வை, கலாச்சாரம் மாற வேண்டும். இதில் மீடியாவுக்கும் முக்கியப் பங்கு, பொறுப்பு உள்ளது. மீடியாதான் உரத்த குரலாக உள்ளது. அவர்கள் மாற்றத்தைக் கொண்டு வர முடியும், கொண்டு வர முடியும்.
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை:
நமது நாட்டில் பெண்களின் பாதுகாப்பு சிறப்பாக இல்லை. நிர்பயா வழக்கு நமது கண்களைத் திறந்து விட்டுள்ளது. இது முதல் வழக்கு அல்ல. இதுபோல பல முறை நடந்தும் கூட நாம் விழித்துக் கொள்ளவில்லை.
பாரபட்சம்:
பெண்கள் இங்கு பாரபட்சமாக பார்க்கப்புகிறார்கள். விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள். இது சரியல்ல. சிந்தனை மாற வேண்டும்.
மனோபாவம் மாற வேண்டும்:
மக்களின் மனோபாவம் மாற வேண்டும். பெண்களும் தங்களைப் போலத்தான், அவர்களாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று ஆண்கள் நினைக்க வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும் என்றார் சானியா மிர்ஸா.